சென்னை: ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் 10ஆவது இடத்தில் இருக்கிறது. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி எஞ்சியிருக்கும் 6 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே தகுதி பெற முடியும். இந்த நிலையில் சிஎஸ்கே அணி வரும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது.

சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. இதனால் போட்டிக்கான டிக்கெட் விற்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் இளம் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இன்று நிகழ்ச்சியில் சிஎஸ்கேவில் தலைமைச் செயல் அதிகாரியான காசி விஸ்வநாதனும் சிஎஸ்கே வீரரான சிவம் துபேவும் கலந்து கொண்டனர்.அப்போது மேடையில் பேசிய காசி விஸ்வநாதன், இந்த தொடரில் சி எஸ் கே அணி சரியாக விளையாடவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். அது உங்களுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்திருக்கலாம்.
ஆனால் இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாட முயற்சி செய்யும். 2010 ஆம் ஆண்டு சீசனில் இதே போன்று தான் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தாலும், அடுத்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை நாம் வென்றோம். அதே போல் இந்த ஆண்டு வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று காசி விஸ்வநாதன் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய சிவம் துபே இளம் விளையாட்டு வீரர்கள் கடுமையாக உழைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களில் எல்லாம் இதுபோல் இளம் வீரர்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில்லை என்றும் ஆனால் தமிழ்நாட்டின் இது கிடைப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் சிவம் துபே பாராட்டினார். இந்த தொகை குறைவாக தெரிந்தாலும் இனி சிஎஸ்கே கவனத்திற்கு வந்த பிறகு அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் சிவம் துபே நம்பிக்கை தெரிவித்தார்.