லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வரும் நிலையில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இன்று லக்னோவை எதிர்கொண்டது. இந்த போட்டி குறித்து பேசிய பயிற்சியாளர் பிளமிங், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் நிக்கோலஸ் பூரானை விரைவாக ஆட்டமிழக்க செய்வது அவசியம் என்று கூறியிருந்தார்.
ஏனென்றால் நிக்கோலஸ் பூரான் இந்த தொடரில் அதிரடியாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார். நிக்கோலஸ் பூரான் 30 பந்துகள் களத்தில் நின்றாலே ஆட்டத்தை தலைகீழாக மாற்றி விடுவார். இதனால் பூரான் விக்கெட்டை சிஎஸ்கே அணி எப்படி வீழ்த்தப் போகிறது என்று ரசிகர்கள் யோசித்து வந்தனர்.

நிக்கோலஸ் பூரானின் பார்மை பற்றி சொல்ல வேண்டும் என்றால், சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் மொத்தமாகவே 32 சிக்சர்களை அடித்து இருக்கிறது. ஆனால் பூரான் தனி ஆளாக நின்று 31 சிக்சரை அடித்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பூரான், பவர் பிளேவில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சிஎஸ்கே அணியின் இளம் வீரர் அன்சூல் கம்போஜ் வீசிய பந்து அவருடைய காலில் பட்டது.
இதற்கு அவர் அவுட் கேட்க, நடுவர் அவுட் தரவில்லை. இதனால் தோனியிடம் டிஆர்எஸ் எடுங்கள் என்று அவர் கெஞ்சினார். முதலில் தோனி இது அவுட்டா இல்லையா என்று சந்தேகம் அடைந்தார். ஏனென்றால் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்யும் என்று அவர் கூறினார். எனினும் தொடர்ந்து விடாப்பிடியாக டிஆர்எஸ் எடுங்கள் என்று கூறியதால் இளம் வீரரை நம்பி அவர் டிஆர்எஸ் எடுத்தார்.
இதனை அடுத்து ரிபிளேவில் பார்த்தபோது பந்து ஸ்டெம்பை அடித்திருக்கும் என கிராபிக்ஸில் கணிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பூரானுக்கு மூன்றாம் நடுவர் அவுட் வழங்கினார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்தியது. மேலும் தோனியும் கொஞ்சம் கூட ஈகோவே இல்லாமல் இளம் வீரர் பேச்சைக் கேட்டு செயல்பட்டதாக ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.