மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி உடனான 3 ஆண்டுகள் பயணம் முடிவுக்கு வந்துள்ளதாக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். இதனால் டேல் ஸ்டெயின் அடுத்ததாக எந்த அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கி இருப்பதால், பல்வேறு அணி நிர்வாகங்களும் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மும்பை அணியின் பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்து வந்த டுவைன் பிராவோ, தற்போது கேகேஆர் அணியின் ஆலோசகராக கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேபோல் லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், டெல்லி அணி புதிய பயிற்சியாளரை தீவிரமாக தேடி வருகிறது.
இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் ரீடெய்ன் செய்யும் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத் அணி கிளாசன், பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரூ.75 கோடி தொகையை ஒப்பந்தத்திற்கு ஒதுக்கவும் தயாராகியுள்ளது.
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த டேல் ஸ்டெயினின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக டேல் ஸ்டெயின் தனது எக்ஸ் பக்கத்தில், ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட வாய்ப்பு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அடுத்த சீசனில் என்னால் ஐதராபாத் அணியுடன் பணியாற்ற முடியாது. ஆனால் எஸ்ஏ20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியுடனான நிச்சயம் தொடரும். ஏற்கனவே இருமுறை கோப்பையை வென்றுள்ளோம்.. இம்முறை 3வது முறையாக வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். டேல் ஸ்டெயினின் அறிவிப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏனென்றால் 3 ஆண்டுகளாக ஐதராபாத் அணியுடன் பணியாற்றி வந்த டேல் ஸ்டெயின், மெகா ஏலத்திற்கு முன்பாக விலகி இருக்கிறார். இதனால் டேல் ஸ்டெயின் விரைவில் வேறு அணியுடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி தரப்பில் பவுலிங் பயிற்சியாளர் தேடப்பட்டு வரும் சூழலில், பிராவோவின் இடத்தில் டேல் ஸ்டெயின் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.