மும்பை: 2025 ஐபிஎல் தொடருக்கான உத்தேச தேதிகள் மற்றும் சில அணிகளுக்கு அளிக்கப்பட உள்ள முக்கியத்துவம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை அந்த இரண்டு அணிகளுமே முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் போட்டிகளுக்குத்தான் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் எனும் நிலையில் சிஎஸ்கே அணி முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடவில்லை என்ற தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் தொடர் எந்த தேதியில் துவங்கும், எந்தெந்த மைதானங்களில் நடைபெறும், இறுதிப்போட்டி மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்று தகவல்களும் வெளியாகி உள்ளன. 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் எனவும், மே 25 அன்று இறுதி போட்டி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

மார்ச் 22 அன்று நடக்க உள்ள முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும். 23ஆம் தேதி இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் எனக் கூறப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதால் முதல் போட்டியில் விளையாடுகிறது. அந்த முதல் போட்டியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் ஆடும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதால் முதல் இரண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளன. இந்த முறை வழக்கமான எட்டு அணிகளின் 8 மைதானங்களைத் தவிர்த்து கௌகாத்தி மற்றும் தரம்சாலாவில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு போட்டிகள் கௌஹாத்தியில் நடைபெறும். அவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதான போட்டிகளாக நடைபெறும். மார்ச் 26 மற்றும் 30ஆம் தேதிகளில் அந்தப் போட்டிகள் நடைபெறும் என தெரியவந்துள்ளது. மார்ச் 26 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியும், மார்ச் 30 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியும் நடைபெறும். தரம்சாலாவில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த முறை பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்பதைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முதல் குவாலிஃபயர் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறும். எலிமினேட்டர் போட்டியும் ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது குவாலிஃபயர் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும். இறுதிப்போட்டியும் கொல்கத்தாவில் நடைபெறும். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் என்ற காரணத்தால் இந்த இரண்டு மைதானங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் எப்போது விளையாடும் என்று தகவல் வெளியாகவில்லை. மார்ச் 30 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது மட்டுமே உறுதியாகி இருக்கிறது. மார்ச் 23 மற்றும் மார்ச் 30 க்கு இடையே நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு போட்டியில் ஆவது விளையாடும் என எதிர்பார்க்கலாம்.