டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பாராத வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு டெல்லி அணிக்காக கருண் நாயர் களமிறங்கினார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கருண் நாயர் பிரித்து மேய்ந்தார். குறிப்பாக பும்ரா ஓவரை எல்லாம் அவர் சுக்கு நூறாக உடைத்தார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் அடித்தார். இதில் 5 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். 33 வயதான கருண் நாயர், இந்திய அணிக்காக கடைசியாக விளையாடி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் கருண் நாயர் அண்மையில் நடைபெற்ற விஜய ஹசாரே கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். எனினும் அவருக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரிலும் கருண் நாயர் அபாரமாக விளையாடியதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.
இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதில் கருண் நாயர் 3 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இது ரசிகர்கள் மனதில் பேரிடியை இறக்கி உள்ளது. நல்ல பார்மில் இருக்கும் கருண் நாயர் இன்றும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
இதனால் கருண் நாயருக்கு போதிய அதிர்ஷ்டமே இல்லை என்று ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். கிரிக்கெட்டில் திறமை மட்டும் போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் போல என்று கருண் நாயரின் விக்கெட்டை குறிப்பிட்டு ரசிகர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். ஏற்கனவே டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் தடுமாறிய நிலையில், கருண் நாயர் ரன் அவுட் ஆனது மிகப்பெரிய பாதிப்பை ஆட்டத்தில் ஏற்படுத்தியது.
எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் கருண் நாயர் தற்போது நல்ல பார்மில் இருப்பதாகவும் அதனை பயன்படுத்திக்கொண்டு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஆட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் பிசிசிஐ தலைமை தேர்வு குழு கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.