மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய 66 ஆவது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில், சமிபிரதாய ஆட்டமாக இது நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 6 ரன்களில் வெளியேற, பிராப்சிம்ரன்சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜாஸ் இங்லிஷ் 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

இதில் இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். 266 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருந்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 53 ரன்கள் அவர் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். நேஹல் வதேரா 16 ரன்களும், ஷசாங் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்த தருணத்தில் களத்திற்கு வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் தனது சிறந்த ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்தினார். 16 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு சிக்ஸர், 3 பவுண்டரி என 44 ரன்கள் விளாசினார்.இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 275 என்ற அளவில் இருந்தது. குறிப்பாக ஒரே ஓவரில் 25 ரன்கள் அவர் விளாசினார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியின் பந்துவீச்சில் முஸ்தஃபீசூர் ரஹ்மான் நான்கு ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. இதனால் கடும் கோபத்தில் இருந்த ஸ்ரேயாஸ் இன்று தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்து காட்டியிருக்கிறார்.