விசாகப்பட்டினம்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தோல்வியை நோக்கி சென்ற நிலையில் அந்த அணியின் இளம் வீரர் ஆஷ்டோஸ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் அஷ்டோஸ் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. டெல்லி அணி தோற்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான இன்னிங்சை அஷ்டோஸ் சர்மா ஆடியிருக்கிறார். இந்த நிலையில் ஆட்ட நாயகன் விருது வென்ற அஷ்டோஸ் தான் இந்த விருதை ஷிகர் தவானுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "நான் கடந்த ஆண்டு இதை கற்றுக் கொண்டேன். ஏனென்றால் சில போட்டிகளை நான் வெற்றிகரமாக முடிக்கவில்லை. எனவே போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் நான் முழு கவனம் செலுத்தி வருகின்றேன். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போதும் இதே பணியை செய்தேன்."
"என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. நான் கடைசி ஒவரை நின்றால் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை உணர்ந்து இருந்தேன். நான் களத்தில் அமைதியாக இருக்க முயற்சி செய்தேன். வலைப்பயிற்சியில் நாம் என்ன ஷாட்டுகளை ஆடினோம் என்பதை நினைவு கூர்ந்து, அதை போட்டியில் விளையாடினேன்."
"இதை செய்ததால் தான் எனக்கு வெற்றி கிடைத்தது. முதலில் விப்ராஜ்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறப்பாக செயல்பட்டார். இது மிகச் சிறந்த இன்னிங்ஸ். நான் அவரிடம் சொன்னது, உங்களால் அடிக்க முடிந்தால் பவுண்டரி வரும் என உறுதியாக நம்பினால் நீங்களும் பெரிய சாட் ஆடுங்கள் என்று கூறினேன்."
"நான் அமைதியாக இருக்க முயற்சி செய்தேன். எனக்கு நான் எந்த நெருக்கடியையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இந்த விருதை நான் என்னுடைய குருநாதரான ஷிகர் தவானுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அஷ்டோஷ் சர்மா தெரிவித்துள்ளார்." இந்தப் போட்டி முடிவடைந்த உடன் ஆஷ்டோஸ் சர்மாவை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஷிகர் தவான் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.