டெல்லி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அபிஷேக் போரல் பந்தை எட்ஜ் செய்ய, அதை சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்தார். ஆனாலும், அவுட் கேட்கவில்லை. இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேண்டுமென்று அவுட் கேட்கவில்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஹர்பஜன் சிங் வர்ணனையின்போது இதே சந்தேகத்தை எழுப்பி இருந்தார். பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இதை சுட்டிக்காட்டி உள்ளனர்.
அபிஷேக் போரல் நிதானமாக விளையாடி வந்ததால் அவரை அப்படியே ஆட வைக்கலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டமிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் துவக்க வீரர் ஜேக் பிரேசர் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கருண் நாயர் மூன்று பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அப்போது ஒருபுறம் அபிஷேக் போரலும், மற்றொருபுறம் கே எல் ராகுலும் இணைந்து பேட்டிங் செய்தனர். இருவரும் நிதானமாகவே ரன் சேர்த்தனர். கே எல் ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.
அதே 13-வது ஓவரில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் அபிஷேக் போரல் ஒரு கேட்சை கொடுத்தார். அப்போது அவரது பேட்டின் கீழே பந்து உரசிச் சென்று விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனது. நிச்சயமாக விக்கெட் கீப்பருக்கு அந்த அதிர்வு சத்தம் கேட்டிருக்கும். ஆனால், சஞ்சு சாம்சன் உட்பட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் யாரும் அதற்கு அவுட் கேட்கவில்லை.
ஏன் ராஜஸ்தான் அணி அவுட் கேட்கவில்லை? என போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஹர்பஜன் சிங் இது பற்றி பேசுகையில், "அபிஷேக் போரல் நிதானமாக விளையாடி வந்ததால் அவரை ஆட்டம் இழக்காமல் வைத்திருக்கலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திட்டமிட்டு இவ்வாறு செய்திருக்கலாம்" எனக் கூறினார்.
ஏனெனில், அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் இவ்வாறு ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவெடுத்து இருக்கலாம் என்றார். இதே கருத்தை சமூக வலைதளங்களில் பல்வேறு ரசிகர்களும் சுட்டிக்காட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேறு ஒரு நிலையில் திட்டமிட்டு ஆடியதாக கிண்டல் செய்தனர்.
எனினும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் போரல் 37 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்திருந்தார். அக்சர் படேல் 14 பந்துகளில் 34 ரன்கள், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்கள், அசுதோஷ் சர்மா 11 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் எடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 11 ரன்கள் மட்டும் எடுத்தது. 12 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் எளிதாக எட்டி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.