சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆறு சீசன்களாக விளையாடியவர் தீபக் சாஹர். சென்னை அணி 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல தீபக் சாஹர் முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தீபக் சாஹர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காயம் ஏற்பட்டு பெரிய அளவில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த சூழலில் நடப்பு மெகா ஏலத்தில் தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபக் சாஹர் என்னுடைய ஆரம்ப காலகட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி, எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அதனால்தான் நான் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்ப முயற்சி செய்தேன்.

ஆனால் என்னுடைய பெயர் ஏலத்தின் இரண்டாவது நாளில் தான் இருந்தது. இதனால் சிஎஸ்கே அணி என்னை ஏலத்தில் எடுப்பது மிகவும் கடினம் என்பதை நான் புரிந்து கொண்டேன். சிஎஸ்கே அணியிடம் கையிருப்புத் தொகை குறைவாகவே இருந்தது. அவர்களிடம் 13 கோடி ரூபாய் தான் இருந்தது. ஆனால் ஒன்பது கோடி ரூபாய் வரை எனக்காக சிஎஸ்கே அணி ஏலம் கேட்டார்கள்.
இது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் என்னுடைய மனதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன். இல்லையென்றால் அது எனக்கு கடினமாக இருக்கும். கடந்த ஆண்டு என்னுடைய பெயர் முதலிலே வந்ததால் சிஎஸ்கே அணி என்னை ஏலத்தில் எடுத்தது. நான் தோனியை மிகவும் மிஸ் செய்வேன். நிச்சயம் நான் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்பி விளையாடுவேன் என்று தீபக் சாஹர் கூறியுள்ளார்.
தீபக் சாஹர் தன்னுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயித்திருந்தார். மும்பை அணியும் பஞ்சாப் அணியும் தீபக் சாஹரை ஏலம் கேட்டது. பஞ்சாப் அணி ஏழரை கோடி ரூபாய் பின்வாங்கிய நிலையில் சென்னை அணி திடீரென்று ஒன்பது கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது.
ஆனால் மும்பை அவரை ஒன்பது கோடி 25 லட்சம் ரூபாய்க்கு எடுத்து இருந்தது. சிஎஸ்கே அணி ஏற்கனவே தங்களுடைய RTM கார்டை ரச்சின் ரவீந்தராவுக்கு பயன்படுத்தியதால் தீபக் சாஹருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.