மும்பை: 2019ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹரிடம் கோபமடைந்தது ஏன் என்பது குறித்து நட்சத்திர வீரரான தோனி தெரிவித்துள்ளார். அப்போது தோனியின் ஆலோசனையை தீபக் சஹர் ஏற்க மறுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேப்டன் கூல் என்று சொல்லப்படும் சிஎஸ்கே அணியின் ஜாம்பவானான தோனி, 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது களத்திலேயே டென்ஷனாகினார். சிஎஸ்கே அணியின் இளம் வீரரான தீபக் சஹர் தொடர்ச்சியாக 2 நோ-பால்களை வீசியதால், நேரடியாக அவரிடம் சென்று காட்டமாக பேசிவிட்டு மீண்டும் விக்கெட் கீப்பர் பொசிஷனுக்கு வந்தார்.

இந்த சம்பவம் குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் கேட்கப்பட்டது. அதுகுறித்து தோனி பேசுகையில், இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டது. தீபக் சஹர் சிஎஸ்கே அணிக்காக சிறந்த கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து டெத் பவுலிங் செய்வதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று புகார் கூறிக் கொண்டே இருப்பார். அந்த நேரத்தில் அவரை நான் டெத் பவுலிங்கில் பயன்படுத்தவில்லை.
கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அவரை பவர் பிளே ஓவர்களில் தான் பயன்படுத்துவேன். அதனால் அவரிடம், பவர் பிளேவில் மிகச்சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்தும் போது, ஏன் டெத் ஓவர்களை வீச வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்பேன். அதேபோல் சிஎஸ்கே அணியில் பவர் பிளே ஓவர்களை வீச தீபக் சஹரும், டெத் ஓவர்களை வீசுவதற்கு வேறு பவுலர்களையும் தான் பயன்படுத்தி வந்தோம்.
ஒருமுறை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தீபக் சஹர் 19வது ஓவரை வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பஞ்சாப் அணி 12 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டம் இருந்தது. ஆனால் தீபக் சஹர் கைகள், உடல் முழுவதும் வியர்வை அதிகம் இருந்தது. அதனை கவனித்ததால், நக்குல் பந்தினை வீசுமாறு ஆலோசனை கூறினேன்.
ஆனால் தீபக் சஹர் எப்போதும் வெவ்வேறு பந்துகளை வீசுவதற்கு ஆசைப்படுவார். அதனால் எனது ஆலோசனையை அவர் ஏற்கவில்லை. என் தாடி நரைத்திருந்ததால், எனக்கு வயதாகிவிட்டதாக நினைத்தார். அப்போது தொடர்ச்சியாக 2 நோ-பால்களை வீசினார். இதனால் நேரடியாக சென்று, உன்னிடம் என்னென்ன பந்துகள் இருக்கிறது என்பதை பார்க்க விரும்பவில்லை.
ஏராளமான யோசனைக்கு பின்னரே, நக்குல் பந்தை வீசுமாறு கூறினேன். அதனை ஏற்று பின்னர் திருத்தி கொண்டார். அன்றைய நாளின் முடிவில், நான் சொன்ன விஷயங்களையும் அவர் புரிந்து கொண்டார். என்னை பொறுத்தவரை வெற்றி, தோல்வியை கடந்து ஒவ்வொரு வீரரும் புரிதலிலும், திறமையிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.