டெல்லி: ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு அந்த அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் பதில் அளித்துள்ளார். டெல்லி அணியின் இயக்குநர் கங்குலி மற்றும் சக உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், ரிடெய்ன் செய்து தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான விதிகளை கடந்த வாரம் பிசிசிஐ வெளியிட்டது. அதில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இம்முறை ரிடெய்ன் செய்யப்படும் வீரர்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், பல்வேறு அணி நிர்வாகங்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஏனென்றால் ரிடெய்ன் செய்யவில்லை என்றால், 6 ஆர்டிஎம் கார்டு வாய்ப்புடன் மெகா ஏலத்தில் பங்கேற்க முடியும். டெல்லி அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ், மெக்கர்க், ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், முகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான நல்ல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் தவிர்த்து அனைத்து வீரர்களை ஏலத்திலேயே குறைந்த தொகைக்கு வாங்க முடியும்.
ஏனென்றால் குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்கள் ரூ.10 கோடிக்கு மேல் ஏலத்தில் சென்றதில்லை. அதேபோல் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு யாரும் பெரிய தொகை கொடுக்க முன்வர மாட்டார்கள். அதேபோல் ஆர்டிஎம் வாய்ப்பும் இருப்பதால், டெல்லி அணிக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரிடெய்ன் செய்யப்படவுள்ள வீரர்கள் குறித்து டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசுகையில், ரிஷப் பண்ட் ரிடெய்ன் செய்யப்படுவாரா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் நிச்சயம் ரிடெய்ன் செய்யப்படுவார். அதேபோல் டெல்லி அணியில் இன்னும் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். தற்போது தான் விதிகள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஜிஎம்ஆர் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அணியின் இயக்குநர் கங்குலியுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அதேபோல் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான அக்சர் படேல், ஸ்டப்ஸ், மெக்கர்க், முகேஷ் குமார், கலீல் அஹ்மத், அபிஷேக் போரெல் உள்ளிட்ட இளம் வீரர்கள் இருக்கின்றனர். விதிகளின்படி எங்களால் 6 வீரர்களை தக்க வைக்க முடியும்.
இந்த ஆலோசனை முடிவடைந்த பின், மெகா ஏலம் குறித்து திட்டம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணிக்கு இடம்பெயர உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது ரிஷப் பண்ட் ரிடெய்ன் செய்யப்படுவார் என்று நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பண்ட் டெல்லி அணியுடன் தொடர்வது உறுதியாகியுள்ளது.