டெல்லி: ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் விலக உள்ளதாக சிஎஸ்கே ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
சாலை விபத்தில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீண்டு வந்த பின், தோனி உடனான நட்பு அதிகரித்தது. ஓய்வில் இருந்த போது தோனியுடன் விடுமுறைக்கு செல்வது, தோனி குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டது என்று தோனியுடன் ரிஷப் பண்ட் மிகவும் நெருக்கமாக இருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட் சென்னை அணிக்கு வரப்போவதாக பேச தொடங்கினர்.

அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் சிஓஓ சுந்தர் ராமன், ரிஷப் பண்ட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதற்கேற்ப டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மீண்டும் தனது ஃபார்மை நிரூபிக்க, அவர் டெல்லி அணி உடனான உறவை தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் டெல்லி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால், ரிஷப் பண்ட் நிச்சயமாக ரீடெய்ன் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.
இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இனி தோனியின் இடத்திற்கு ரிஷப் பண்ட் வருவதற்கு வாய்ப்பில்லை என்று உறுதியானது. இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், ஒருவேளை மெகா ஏலத்திற்கு வந்தால், நான் வாங்கப்படுவேனா? அல்லது வாங்கப்பட வாய்ப்பில்லையா? அல்லது எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவேன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்யும் வீரர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் டெல்லி அணியும் ரிஷப் பண்ட் உடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த ரிஷப் பண்ட், எக்ஸ் பக்கத்தில் இந்த பதிவை எழுதியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர அந்தஸ்து வாய்ந்த பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் மெகா ஏலத்தில் பங்கேற்றால், அவரை வாங்குவதற்கு அத்தனை அணிகளும் போட்டி போடும். ஆனால் ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு வந்தால், நிச்சயம் சிஎஸ்கே அணி பெரிய தொகை கொடுத்து வாங்க முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.