டெல்லி: 2025 ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர் நேற்று நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே இந்த சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றது. இந்த சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த நிலையில் கடைசி சூப்பர் ஓவர் இதற்கு முன்பு எப்போது நடைபெற்றது? என பலரும் தேடி வந்தனர்.
சுமார் நான்காண்டுகளுக்கு முன்பு தான் ஐபிஎல் தொடரில் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்று இருந்தது. 2021 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் இதே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் விளையாடியிருந்தது. அந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் எடுத்திருந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் விளையாடியது. ககிசோ ரபாடா வீசிய ஓவரில் கேன் வில்லியம்சன் மற்றும் ஜகதீஷா சுச்சித் 15 ரன்கள் சேர்த்தனர். இதை அடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங் செய்ய வந்தது.
கேன் வில்லியம்சன் மற்றும் டேவிட் வார்னர் அந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தனர். அவர்கள் அக்சர் படேல் வீசிய சூப்பர் ஓவரில் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சேஸிங் செய்தது. அந்த அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர்.
அவர்கள் எளிதாக எட்டு ரன்களை எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தனர். தற்போது மீண்டும் அதே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி இருக்கிறது. இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 188 ரன்கள் எடுத்தது.
அடுத்த பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 188 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ரன்கள் என்ற இலக்கை நான்காவது பந்திலேயே எட்டி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. கே எல் ராகுல் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் சூப்பர் ஓவரில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தனர்.