டெல்லி: ஐபிஎல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங்கை நீக்கி இருந்தது. அதனை அடுத்து அந்த அணியின் ஆலோசகரான இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலியை அந்த அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் என்ற கருத்து நிலவியது. மேலும் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது சவுரவ் கங்குலியை அந்த அணி பயிற்சியாளராக நியமிக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உலகக் கோப்பை வென்ற ஒரு முன்னாள் வீரரைத் தான் பயிற்சியாளராக நியமிப்போம் என்ற முடிவிலும் அந்த அணி இருப்பது இருப்பதாக கூறப்படுகிறது.

உலகக்கோப்பை வெல்லாதவர் என்பதால் கங்குலிக்கு தலைமை பயிற்சியாளர் பதவி அளிக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2018 முதல் 2024 வரை ஏழு ஆண்டுகள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ரிக்கி பாண்டிங். கங்குலி அதே அணியின் ஆலோசகராக மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இந்த ஏழு ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெரிய முன்னேறத்தை அடையவில்லை. 2020 ஐபிஎல் தொடரில் இறுதி போட்டி வரை முன்னேறி இருந்தது. 2021 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது.
அதன் பின் அந்த அணி மீண்டும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவரை அணியிலிருந்து நீக்கி இருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம். இந்த நிலையில் தான் சவுரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராக தனக்கு விருப்பம் இருப்பதை தெரிவித்து இருந்தார். ஆனால், டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் இந்தியாவை சேர்ந்த ஒரு பயிற்சியாளரை தான் நியமிப்போம். ஆனால், அது சவுரவ் கங்குலி அல்ல. உலகக்கோப்பை வென்ற ஒருவர், கவுதம் கம்பீர் போல ஆக்ரோஷமான ஒருவரை தான் தேர்வு செய்ய உள்ளோம் என்ற முடிவில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும், பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜேம்ஸ் ஹோப்ஸ் நீக்கப்படுவார் எனவும், அவருக்கு பதிலாக சமீபத்தில் இந்திய அணியில் பணி நிறைவு செய்த பவுலிங் பயிற்சியாளர் ஃபராஸ் மம்ப்ரேவை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.