சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கு சென்னை சேப்பாக்கம் பிட்ச் தான் காரணம் என தோனி கூறியதாக தற்போது ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பிறகு இதுவரை கிடைத்த தோல்விகளுக்கு காரணம் குறித்து தோனி பேசுகையில், "சென்னையில் விக்கெட் மிகவும் மந்தமாக இருந்தது. நாங்கள் சென்னையை விட்டு வெளியே மற்ற மைதானங்களில் விளையாடும் போது எங்கள் பேட்டிங் குழு சற்று சிறப்பாகவே ரன் குவிக்கிறது."

"நாங்கள் நல்ல விக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் பேட்ஸ்மேன்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். அவர்களின் ஷாட்களை ஆடும் உத்வேகத்தை அளிக்கும். யாரும் பயந்து, பயந்து விளையாட விரும்ப மாட்டார்கள்" என்று கூறினார் தோனி.
இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் மிகவும் மந்தமாக இருப்பதால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள், பயந்து, பயந்து விளையாடுகிறார்கள் என தோனி கூறி இருக்கிறார். ஏற்கனவே, பல்வேறு அணிகளை சேர்ந்தவர்களும் தங்களின் சொந்த மைதானத்தில் பிட்ச் தாங்கள் கேட்டதன் படி அமையவில்லை என புகார் சொல்லி வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஈடன் கார்டன் மைதான நிர்வாகத்திற்கும் இதனால் பனிப்போர் நடந்து வருகிறது. அதே போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதான நிர்வாகத்திற்கும் இடையே பிட்ச் தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் லக்னோவில் அந்த அணி விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பிட்சை தயாரித்தவர் மீது நேரடியாகவே விமர்சனத்தை முன் வைத்திருந்தார். இப்படி ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த மைதானத்தில் ஏற்படும் தோல்விக்கு பிட்சை தயாரிப்பவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதை செய்யவில்லை என குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தற்போது அந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் தோனியே சென்னை சேப்பாக்கம் மைதானம் மீது இந்த குற்றச்சாட்டை தற்போது முன்வைத்து இருக்கிறார். இது ஐபிஎல் அரங்கில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.