சென்னை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஒரு ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அந்த அணி வரிசையாக விக்கெட்களை இழந்து டெஸ்ட் போட்டி போல ஆடியது. 72 ரன்களுக்கு ஏழு விக்கெட்களை இழந்த நிலையில் 15-வது ஓவரில் தோனி ஆடுகளத்துக்கு வந்தார். அவர் ஒன்பதாம் வரிசையில் தான் பேட்டிங் செய்ய வந்தார்.

அதுவரை சிஎஸ்கே அணி 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தோனி அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என ரசிகர்கள் தங்களின் கடைசி நம்பிக்கையை அவர் மீது வைத்தனர். ஆனால், அவர் சுனில் நரைன் வீசிய ஓவரில் பந்தை தடுக்க முயன்றபோது பந்து அவரது காலில் பட்டது.
உடனே சுனில் நரைன் அவுட் கேட்டார். களத்தில் இருந்த நடுவர் உடனடியாக அவுட் என அறிவித்தார். ஆனால், தோனியோ பந்து பேட்டில் பட்டதாக பேட்டை உயர்த்திக் காண்பித்தார். ஆனால், அம்பயர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் அவுட்டென அறிவித்துவிட்டார். இதை அடுத்து தோனி உடனடியாக ரிவ்யூ செய்தார்.
ரிவ்யூ செய்தபோது ரீப்ளேயில் பேட்டுக்கும் பந்துக்கும் இடையே இடைவெளி இருப்பது போல இருந்தது. மூன்றாவது நடுவர் பலமுறை ரீப்ளே செய்து பார்த்தபோதும் அல்ட்ரா எட்ஜில் லேசான அதிர்வு இருந்தாலும் உறுதியாக பேட்டில் பட்டதற்கான வீடியோ ஆதாரம் இல்லை.
இதை அடுத்து மூன்றாவது நடுவர் பந்துக்கும் பேட்டுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக கூறி, பந்து காலில் பட்டதால் எல்பிடபிள்யூ முறையில் அவுட் என அறிவித்தார். இதை அடுத்து சிஎஸ்கே அணியின் கடைசி நம்பிக்கையான தோனி ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர் நான்கு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறியிருந்தார். தோனி அவுட் இல்லை என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். எனினும் சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் படுமோசமாக பேட்டிங் செய்திருந்தது.
தோனி அதிரடியாக ஆடி இருந்தாலும் அந்த அணி பெரிய ஸ்கோரை எடுத்திருக்காது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிவம் துபே அதிகபட்சமாக 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.