லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ஒரு சிறப்பான ரன் அவுட்டை செய்தார். அது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. அது முற்றிலும் அதிர்ஷ்டம் தான் என ராபின் உத்தப்பாவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் மிட்செல் மார்ஷ் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ஐடன் மார்கிரம் 6 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 8 ரன்களும் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். ரிஷப் பண்ட் சற்று மெதுவாக விளையாடினாலும் 49 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.

ஆயுஷ் பதோனி 17 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அப்துல் சமத் அதிரடியாக விளையாடினார். அவர் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி ஓவரில் தனது அணியின் ஸ்கோரை உயர்த்த அவர் முடிவு செய்திருந்த நிலையில் கடைசி ஓவரின் இரண்டாவது பந்திலேயே அவர் ரன் அவுட் ஆனார்.
பதிரானா வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்து ஒயிடாக சென்றது. அப்போது எதிரே நின்றிருந்தது ரிஷப் பண்ட் தான் ஸ்ட்ரைக்கை பெற வேண்டும் என்பதற்காக அப்துல் சமத்தை ஒரு ரன் ஓடிவருமாறு அழைத்தார்.
அப்துல் சமத் அதை பார்த்து ஓடுவதற்கு சில வினாடிகள் ஆனது. அந்த தாமதத்தால் அவரால் கிரீசுக்குள் வேகமாக வர முடியவில்லை. அதற்குள் தோனி பந்தை எடுத்து நான்-ஸ்ட்ரைக்கர் எண்டை நோக்கி வீசினார். தோனி வேகமாக பந்தை வீசவில்லை ஏனெனில், அவர் மிகவும் பின்னால் இருந்ததால் அங்கிருந்து நான்-ஸ்ட்ரைக்கர் எண்டை நோக்கி பந்தை எரிந்தால் அது நிச்சயமாக வேறு பக்கம் தான் செல்லும்.
அதற்கு பதிலாக அவர் பந்தை பௌலிங் செய்வது போல தூக்கி வீசினார். பந்து சற்று மெதுவாக வந்தாலும் சரியாக ஸ்டெம்பை அடித்தது. அப்துல் சமத் ஓடி வருவதற்குள் பந்து ஸ்டம்பை அடித்தது தான் இதில் ஆச்சரியம். ஏனெனில், தோனி நிச்சயமாக வேகமாக வீசவில்லை எனினும், அதிர்ஷ்டம் காரணமாக அப்துல் சமத் ரன் அவுட் ஆனார்.
தோனியின் இந்த அதிர்ஷ்டத்தை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். சிலரோ இது அதிர்ஷ்டம் இல்லை தோனி மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தான் வீசினார் என அவரை பாராட்டியும் வருகின்றனர்.
இந்த போட்டியில் லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.