சென்னை: ஐபிஎல் தொடரில் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஒரு வினோதமான விஷயம் நடைபெற்று இருக்கிறது. பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் பெரும்பாலும் தோல்வியே தழுவாது. ஏழு போட்டிகள் நடைபெறுகிறது, என்றால் அதில் குறைந்தபட்சம் ஆறு போட்டிகளிலாவது சிஎஸ்கே வெற்றி பெற்றுவிடும்.
இதனால் தான் ஆர்சிபி, டெல்லி அணிகள் எல்லாம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை சென்னையில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் சிஎஸ்கே வின் கோட்டையான சேப்பாக்கம் தகர்க்கப்பட்டு இருப்பதாக எதிரணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்ம் இதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம்.

சிஎஸ்கே ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என்பது தோனி, பிளமிங் உள்ளிட்ட வீரர்களுக்கு நன்கு தெரியும். இதற்கு தகுந்தார் போல் தான் சிஎஸ்கே அணி தங்களுடைய வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்தது. சென்னையில் ஏழு போட்டிகள் நடைபெறும். இதில் அஸ்வின் உட்பட மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தால் 7 போட்டிகளுமே சிஎஸ்கே வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்த்துதான் சிஎஸ்கே வீரர்களை வாங்கியது.
ஆனால் அதற்கு நேர்மாறாக ஆடுகளம் அமைக்கப்பட்டு இருப்பது தான் தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பயிற்சியாளர் பிளமிங் முதல்முறையாக தன்னுடைய ஆதங்கத்தை செய்தியாளர் சந்திப்பிலே வெளியிட்டார். அதில் சென்னை ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் இம்முறை ஆடுகளம் எப்படி இருக்கிறது. எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார்.
எங்களுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆடுகளும் இது இல்லை என்பதை அவர் கூறிவிட்டார். இந்த நிலையில் அடுத்த சில போட்டிகளில் வேறு ஒரு ஆடுகளும் வழங்கப்பட்டது. அதில் சிஎஸ்கே பேட்டிங் செய்யும்போது ஆடுகளும் மிகவும் தோய்வாகவும், எதிரணி பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் மாறி இருந்தது. இதுவும் சிஎஸ்கே குழுவினரை அதிர்ச்சி அடைய செய்தது.
இது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் நானி சிஎஸ்கே அணியில் பேட்டிங் சரியில்லை. இதனால் சுழற் பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமான ஆடுகளத்தை அமைக்க கூடாது.கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தால் தான் சிஎஸ்கே வீரர்களால் ரன்கள் அடிக்க முடியும். இதனை தோனி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதன் பிறகு நடத்தப்பட்ட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு மோசமான ஆடுகளம் அமைக்கப்பட்டு அதில் சிஎஸ்கே அணி 103 ரன்களில் ஆட்டம் இழந்தது. சிஎஸ்கேவை பொறுத்த வரை நிலைமை இப்படி இருக்கிறது. ஆனால் மற்ற மைதானங்களில் என்ன நடக்கிறது என்று தற்போது பார்க்கலாம். மும்பை அணி குஜராத்துக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது எந்த மாதிரியான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்து கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் உள்ளிட்டோர் அறிவுரைகளை வழங்கி இருந்திருக்கிறார்கள்.
அதன்படி களிமண் மற்றும் செம்மண் என இரு மண்ணும் கலந்து ஓர் ஆடுகளம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் மும்பை அணி வீரர்கள் தடுமாறினர். இதேபோன்று லக்னோ ஆடுகளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து ரிஷப் பன்ட் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி ஆடுகளம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பண்டே வெளிப்படையாக கூறிவிட்டார்.
சரி அதுதான் நிலைமை என்று பார்த்தால் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்ததுதான் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். ஏனென்றால் மும்பை வான்கடே மைதானம் முற்றிலும் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் என்று அனைவருக்குமே தெரியும். இந்த வகையில் சன்ரைசர்ஸ் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
இதனால் சன்ரைசர்ஸ் அணி வான்கடே மைதானத்தில் முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிக்கும் என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெயின் கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.ஆனால் அதனை பொய்யாக்கும் விதமாக இன்று ஆடுகளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்துவதற்காக மும்பையின் இயல்பை மாற்றி ஆடுகளத்தை மும்பை அணி நிர்வாகம் மாற்றி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன்சி வெளிப்படையாக கூறியிருந்தார். நாங்கள் மும்பை ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து வந்தோம். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளும் முற்றிலும் கடினமாக இருந்தது என்று அவர் கூறினார். இப்படி நிலைமை இருக்க, சிஎஸ்கே அணி மட்டும் ஏன் சொந்த மண்ணில் தடுமாறுகிறது. இதனால் சென்னை கேட்கும் ஆடுகளத்தை ஆடுகளப் பராமரிப்பாளர்கள் அமைத்து தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கூறியதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. அதில் பேசிய தோனி இதுபோன்று பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமான ஆடுகளத்தில் எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடுகிறார்கள். எனவே எங்கள் சொந்த மண்ணான சென்னையில் இது போன்ற ஆடுகளத்தை அமைத்தால் எங்கள் அணி வீரர்களும் கொஞ்சம் கவலையின்றி ஷாட்களை விளையாடி ரன்களை சேர்ப்பார்கள்.
இது எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என்று கூறியிருந்தார். அதாவது நாங்கள் கேட்கும் ஆடுகளங்களை எங்களுக்கு தரவில்லை. இனிமேலாவது தாருங்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் தோனி. இந்த நிலையில் சென்னை அணி கேட்கும் ஆடுகளத்தை வழங்காமல் மாற்றி தரும் அந்த கருப்பு ஆடு யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் ஒன்று சென்னை அணி எப்போதும் சேப்பாக்கம் மைதானத்தில் தான் பயிற்சி பெறும் என்றும் ஆனால் தற்போது சென்னை அணிக்கு என தனி பயிற்சி மைதானம் அமைக்கப்பட்டு சிஎஸ்கே அங்கு சென்று பயிற்சி செய்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இது போல் ஆடுகளம் அமைக்கப்படுகிறது என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அது தவறு என்றும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளுக்கும் நல்ல நட்புறவு இருக்கத்தான் செய்கிறது என்று சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் அதிக தோல்விகளை சந்தித்து விட்டது எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலாவது சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இழந்த மானத்தை சேப்பாக்கம் மைதானத்தில் காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.