லக்னோ: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி நடந்துகொண்ட விதம் அபிஷேக் சர்மாவை கோபத்தில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவத்தால் பரபரப்பு நிலவிய நிலையில், அடுத்ததாக இஷான் கிஷனின் விக்கெட்டையும் திக்வேஷ் ரதி வீழ்த்தினார். அதன் பின்னரும் ஒரு புத்தகத்தை எடுத்து அதில் குறித்து வைப்பது போல சைகை செய்தார். அதனால் இஷான் கிஷனும் அதிருப்தி அடைந்தார்.
இதைக் கண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஓடி வந்து திக்வேஷ் ரதியை எச்சரித்தார். தொடர்ந்து இதுபோல செய்யக் கூடாது என எச்சரித்தார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதிக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது இரண்டு அம்பயர்களும் ஓடி வந்து அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருந்தனர். இந்தச் சம்பவம் நடந்து சில நிமிடங்களிலேயே மீண்டும் ரதி அவ்வாறு செய்தது ரிஷப் பண்ட்டை அதிருப்தியில் ஆழ்த்தியது.
போட்டிக்குப் பிறகு அபிஷேக் சர்மாவையும் திக்வேஷ் ரதியையும் சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்தது. இதை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா முன்னின்று செய்தார். அவர் அபிஷேக் சர்மாவிடமும், திக்வேஷ் ரதியிடமும் பேசினார். அதன் முடிவில் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு அந்த விவகாரம் குறித்துப் பேசி சமாதானம் ஆனார்கள்.
இதைக் கண்ட ரசிகர்கள், போட்டியின் போது ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்ட இருவரும் இப்போது அமைதிப் புறாக்கள் போல மாறிவிட்டதாக மீம்ஸ்கள் வெளியிட்டு வந்தனர். இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 205 ரன்கள் எடுத்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்திருந்தார்.