பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட உள்ள நிலையில், அந்த இறுதிப் போட்டியில் வென்றால் அதன் ஆலோசகர் தினேஷ் கார்த்திக்கின் தொல்லை தாங்க முடியாது என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மைக்கேல் ஆத்தெர்டன் மற்றும் நாசிர் உசேன் பேசியுள்ளனர். 'ஸ்கை ஸ்போர்ட்ஸ்' தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்த விவாதம் நடைபெற்றது.
அப்போது, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுவது பற்றிய விவாதம் நடந்தது. இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிட்டால், அதன் ஆலோசகர் தினேஷ் கார்த்திக்கின் தொல்லை தாங்க முடியாது என நாசிர் உசேன் குறிப்பிட்டார். அதற்கு மைக்கேல் ஆத்தெர்டன், "இரண்டு மடங்கு அவரது தொல்லை இருக்கும்" என விளையாட்டாக கூறினார்.

இதற்கு முன்பு தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டபோது நாசிர் உசேன் மற்றும் மைக்கேல் ஆத்தெர்டன் ஆகியோரோடு ஒன்றாக வர்ணனை செய்து உள்ளார். அதன் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் எப்படி பேசுவார் என்பதை வைத்து அவர்கள் விளையாட்டாக இவ்வாறு கூறியுள்ளனர்.
மேலும், இதுவே பயிற்சியாளராக அல்லது ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படும் முதல் ஆண்டாகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குத்தான் தினேஷ் கார்த்திக் ஆலோசகராக முதன்முறையாக செயல்படுகிறார். அப்படி அவர் முதன்முறையாக ஒரு அணியின் ஆலோசகராக கோப்பை வென்றால் அவரது பேச்சு அதிகப்படியாக இருக்கும் என விளையாட்டாக அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதுபற்றி நாசிர் உசேன் பேசுகையில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அந்த அணி வெற்றி பெற்றுவிட்டால் தினேஷ் கார்த்திக் தாங்க முடியாதவராக இருப்பார். ஒரே சீசனில் பயிற்சியாளராக, ஆலோசகராக வென்று இருப்பார்" என்று நாசிர் உசேன் குறிப்பிட்டார்.
அடுத்து மைக்கேல் ஆத்தெர்டன் பேசுகையில், "அவர் தனது சிறந்த காலங்களில் தாங்க முடியாத ஒருவராகவே இருந்துள்ளார். இப்போது கோப்பை வென்றுவிட்டால் இரண்டு மடங்கு அவரது தொல்லை தாங்காது. அவர் ஜான் டெர்ரி போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி நிகழ்ச்சியில் கோப்பையை விராட் கோலியுடன் சேர்ந்து வாங்கிக் கொண்டிருப்பார்" இவ்வாறு கூறினார்.