சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு தோனி இன்னும் ஆசைப்படுவதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் கங்கா கூறியிருக்கிறார். சிஎஸ்கேவின் கேப்டன்சி விவகாரம் அணியின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும், இன்று ருதுராஜ் கெய்க்வாட்டும், முன்பு ஜடேஜாவும் இதனால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் 5 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகக் கொண்டு செயல்பட்டது. அதன் பின் அவர் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அதன் பிறகு அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி யாருக்குச் செல்லும் என அனைவரும் காத்திருந்த நிலையில், அந்த அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார்.

இது ரசிகர்களை மகிழ்வித்தாலும், அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது சரியான முடிவு அல்ல என டேரன் கங்கா கூறியிருக்கிறார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடிய நிலையிலேயே, இப்போதே அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அணியை தயார் செய்து வருவதாக அறிவித்திருக்கிறது. அதைப் பற்றியும் அவர் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
டேரன் கங்கா பேசியதாவது: "நீங்கள் இப்போதே அடுத்த ஆண்டுக்காக அணியை தயார் செய்வதாகச் சொல்வது, அதிக ஆபத்தானதாக உங்களுக்குத் தெரியவில்லையா? அதிலும், தோனி போன்ற, இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத ஒருவர் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் இந்த முடிவை எடுப்பது ஆபத்தாக அமையாதா? அவரின் உடல் தகுதி மற்றும் ஒரு தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியுமா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவரை நம்புவது அணிக்கு பின்னடைவாக அமையாதா?".
"நீங்கள் மீண்டும் துவக்கத்துக்கே செல்கிறீர்கள். மீண்டும் கேப்டனாக யாரை நியமிப்பது எனத் தேடுவீர்கள். ஒரு சீசனில் உங்களின் திட்டங்களிலும், அணியின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிப்பதிலும் பங்கு பெறாத ஒருவரை கேப்டனாக நியமிப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் தொடர்ந்து முன்னேறும் அணியாகவும், முன்னேற்றத்தைச் சந்திக்காத அணியாகவும் மாற்றி மாற்றி இருந்து கொண்டிருப்பீர்கள். தோனி நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம்பெறலாம். அவர் விளையாட ஒப்புக்கொண்டு விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் விளையாடுவது மிகவும் சிறப்பானது".
"ஆனால் இங்கே மிகப்பெரிய கேள்வி என்னவெனில், அந்த அணியிலேயே அவர் தன்னைத்தான் கேப்டனாக நினைக்கிறார் என்றால், 18 ஆண்டுகள் அந்த அணியை நீங்கள் வழிநடத்திய பிறகும் அவர் அதை நினைக்கிறார் என்றால், அது சரியா? இது ஒரு விளையாட்டு. இங்கு கேப்டன் பதவி என்பது ஏதோ ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரவேண்டும். அடுத்து ஒருவர் அந்தப் பதவியைப் பெற வேண்டும்."
"இப்போது ருதுராஜ் கெய்க்வாட், இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தோனியின் 'கேப்டன் பதவி ஆசையால்' நிச்சயமற்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இது அந்த அணிக்கு நல்ல சூழ்நிலை அல்ல. நான் இதுபோன்ற சூழ்நிலைகளில் இதற்கு முன் இருந்திருக்கிறேன். நமக்கு பின்னால் ஒருவர் கேப்டன் பதவியைப் பெற நினைக்கும்போது, நமக்கு அது நிச்சயமற்ற சூழ்நிலையை உருவாக்கும். அவர் அதற்கு ஆசைப்படவில்லை என நமக்குக் காட்டப்பட்டாலும், நமக்கு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும்" என்று கூறியிருக்கிறார் டேரன் கங்கா.