பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ரிவ்யூ செய்ய அம்பயர் மறுத்தது சர்ச்சையான நிலையில், அது குறித்து ரசிகர்கள் அம்பயரை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் அம்பயரான அனில் சௌத்ரி என்ன நடந்தது என விவரித்திருக்கிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும் டெவால்ட் பிரெவிஸ் செய்த தவறான விஷயத்தை அவர் சுட்டிக்காட்டி விளாசி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தது. அப்போது நான்காம் வரிசையில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும், ஐந்தாவது வரிசையில் களமிறங்கிய டெவால்ட் பிரெவிஸும் ஆடினர். பிரெவிஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் ஆனதாக அம்பயர் அறிவித்தார்.

அம்பயர் 'அவுட்' என சிக்னல் செய்த பிறகும், ரவீந்திர ஜடேஜாவும், டெவால்ட் பிரெவிஸும் ரன் ஓடினர். அது குறித்து தான் அனில் சௌத்ரி விமர்சனம் செய்து இருக்கிறார். கிரிக்கெட் விதிப்படி, அம்பயர் 'அவுட்' என அறிவித்தால் அந்தப் பந்து அத்துடன் முடிவுக்கு (Dead) வந்துவிட்டதாக அர்த்தம். அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் அல்லது இரண்டு ரன்கள் ஓடினாலும் அது வீண் தான்.
அம்பயர் அறிவித்த அவுட் தவறு என பின்னர் ரிவ்யூவில் தீர்ப்பு வந்தாலும், அந்த ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. ஏனெனில், அம்பயர் 'அவுட்' என அறிவித்தவுடன், அந்தப் பந்து முடிவுக்கு வந்துவிடும். மேலும் அப்போதிலிருந்து 15 வினாடிகளுக்குள் ரிவ்யூ செய்வதாக இருந்தால், பேட்ஸ்மேன் அது குறித்தும் முடிவெடுக்கலாம்.
ஆனால், இந்தச் சம்பவத்தின் போது, ரவீந்திர ஜடேஜா மற்றும் டெவால்ட் பிரெவிஸ் அம்பயர் அவுட் கொடுத்ததை பார்க்காமல், ரன் ஓடுவதில் கவனமாக இருந்தனர். அந்த ரன்னை ஓடிக்கொண்டிருந்த போதுதான் அம்பயர் அவுட் கொடுத்ததை டெவால்ட் பிரெவிஸ் கவனித்தார். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஆலோசனை செய்தார். இந்த நிகழ்வுகள் முடிவடைய 22 வினாடிகள் ஆனது. அதன் பிறகு அவர் ரிவ்யூ கேட்டதாக அனில் சௌத்ரி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இது பற்றி அனில் சௌத்ரி பேசுகையில், "ரவீந்திர ஜடேஜா மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ரன் ஓடுவதில் நேரத்தை வீணடித்தனர். அவர்கள் இருவரும் டிஆர்எஸ் எடுப்பது பற்றி முடிவு செய்யாமல் 22 வினாடிகளை வீணடித்தனர். இது ரிவ்யூ செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் ஆகும். பேட்ஸ்மேன்கள் செய்த தவறுக்கு அம்பயர்கள் எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்."
"அம்பயர் டெவால்ட் பிரெவிஸுக்கு அவுட் கொடுத்த பிறகு அவர்கள் இருவரும் ஏன் ஓடினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தப் பந்து அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஜடேஜா ஒரு மூத்த வீரர், நிறைய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்பட்டால், பந்து அத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஜடேஜா தான் இங்கு மூத்த வீரராக இருந்து தவறு செய்து இருக்கிறார்" என்றார் அனில் சௌத்ரி.