சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2011 முதல் 2017 சீசன் வரையிலும் 2019 முதல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரையும் பிராவோ இருந்திருக்கிறார். சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர் பயிற்சியாளராக கடந்த இரண்டு சீசன்களாக செயல்பட்டார். பிராவோக்கு என சென்னையில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள்.
தனது பேட்டிங், பில்டிங் மற்றும் பந்துவீச்சு என மூன்று துறையிலும் கொடிகட்டி பறந்த பிராவோ தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சென்று இருக்கிறார். இந்த நிலையில் பிராவோ சென்றதற்கான காரணம் என்ன என்று பல்வேறு ரசிகர்களும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியை விட்டு விலகியது குறித்து பிராவோ முதல்முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிராவோ, நான் சிஎஸ்கே அணியை விட்டு விலகுவது என்பது தற்போது ரகசியம் ஒன்றும் கிடையாது. செய்திகள் வெளி வந்து விட்டது. ஆம், நான் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற ஒப்புக் கொண்டிருக்கின்றேன்.
இந்த சிறந்த தருணத்தில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கு பிடித்த விஷயத்தை மேற்கொள்ள சிஎஸ்கே அணி நிர்வாகம் அனுமதி அளித்து இருப்பதற்கும் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சென்னையில் இருக்கும் என்னுடைய ரசிகர்களும் உலகம் முழுவதும் உள்ள சிஎஸ்கே ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்களுடைய ஆதரவும் உங்களுடைய ஆசியும் எனக்கு எப்போதுமே வேண்டும். நிச்சயமாக நான் சிஎஸ்கே அணி விட்டு செல்வது உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் என்று எனக்கு தெரியும். எனினும் நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் உங்களுடைய ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் மீது நான் அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கின்றேன்.
எப்போதுமே மஞ்சள் நிறம் தான் மனதில் நிற்கும். உங்களை எதிர் திசையில் இருந்து விரைவில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று பிராவோ கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் பிராவோ இதுவரை 183 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு முறை பர்பிள் தொப்பியை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் சிபிஎல்,எம் எல் சி மற்றும் ஐஎல்டி 20 ஆகிய தொடர்களிலும் நைட் ரைட்ரஸ் அணிக்கு மென்டராக பணிபுரிய போகிறார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு இது சரியான தருணம் என்றும் பிராவோ கூறியுள்ளார்.