மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில், 2025 ஐபிஎல் தொடர் எப்போது மீண்டும் துவங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர். இது தொடர்பாக பிசிசிஐ என்ன முடிவெடுத்திருக்கிறது என்பது பற்றிப் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோர நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றதால், 2025 ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பின்போது, ஒரு வார காலத்திற்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தெளிவாகக் கூறியிருந்தது.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தாக்குதல்களை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் அடுத்த வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பிசிசிஐ இது தொடர்பாக அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ இத்தனை அவசரமாக மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் போட்டிக்கும் ஒளிபரப்பின் மூலம் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எனவே, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தாமதம் செய்தால் அதனால் பின்னர் போட்டிகளை நடத்த முடியாமல் போனால் அதனால் பெரும் இழப்பு ஏற்படும்.
ஜூன் இரண்டாவது வாரம் முதல் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர். எனவே, அதற்குள் ஐபிஎல் தொடரை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த காரணங்களால் தான் பிசிசிஐ மீதமுள்ள 17 ஐபிஎல் போட்டிகளையும் விரைவாக நடத்தி முடிக்க நினைக்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்தப் போட்டி மீண்டும் முதலில் இருந்து நடத்தப்படும் என கூறப்படுகிறது. அந்தப் போட்டியுடன் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீதமுள்ளன.
அவற்றுக்கான அட்டவணையையும், எந்தெந்த மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம் என்பதையும் ஐபிஎல் நிர்வாகம் விரைவில் முடிவெடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மற்ற ஐபிஎல் அணிகள் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு ஐபிஎல் தொடர் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய வீரர்கள் அவரவர் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அட்டவணை வெளியானவுடன் தங்கள் அணிகளுடன் இணைவார்கள். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் பலரும் அவர்கள் நாட்டுக்குத் திரும்பி இருக்கின்றனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைக்க வேண்டும். அது சிக்கலான விஷயமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.