சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கி விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இதில் உண்மை இல்லை. அதே சமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்தில் சில மாற்றங்களும் ஏற்பட்டு இருக்கிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னையை சார்ந்த அணிக்கான உரிமையை பெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கினார். அந்த நிறுவனத்தின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணி உருவாக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரின் முதல் எட்டு அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்றது. இந்தியா சிமெண்ட் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்தனர். அதனால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்து வருவதாக ஒரு எண்ணம் பலருக்கும் இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32.72 சதவீதம் பங்குகளை வாங்கி உள்ளது. மொத்தமாக 55 சதவீத பங்குகளை வாங்கவும் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை அடுத்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட் கைகளுக்கு செல்ல உள்ளது. சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களிடம் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக அறியப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்-உம் பிர்லா குழுமத்தின் கைகளுக்கு செல்லுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. சிலர் சமூக வலைதளங்களில் பிர்லா குழுமம் சிஎஸ்கே அணியை வாங்கிவிட்டதாக தகவல் பரப்பி வந்தார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் என்ற நிறுவனம் தனியாக செயல்பட்டு வருவதாகவும், இனிமேல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சிஎஸ்கே அணியை நிர்வகிக்காது எனவும் அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறி உள்ளார். மேலும், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட்-இன் போர்டு உறுப்பினராக விரைவில் பதவி ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இனி சிஎஸ்கே நிறுவனம் தனி நிறுவனமாகவே செயல்படும் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினரே சிஎஸ்கே அணியின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார்கள் என்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ரூபா குருநாத் சிஎஸ்கே அணியின் பெரும்பான்மையான நிர்வாக முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது. முதற்கட்டமாக அவர் மகளிர் ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே மகளிர் அணி ஒன்றை துவக்கலாமா? என்பது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.