மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பிளமிங்கை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிளமிங் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். தோனி பிளமிங் கூட்டணி 16 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியை வழி நடத்தி வருகிறது.
இதில் ஐந்து முறை சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டு தவிர சிஎஸ்கே அணி அனைத்து சீசன்களிலும் சென்று இருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு பிளே ஆப் க்கு தகுதி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐபிஎல் தொடர் தற்போது முற்றிலும் மாறி வருகிறது. எப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் 300 ரன்களுக்கு மேல் அடிக்கிறார்களோ, அதைப்போல் ஐபிஎல் தொடரிலும் அனைத்து அணிகளும் 200 ரன்களுக்கு மேல் அடிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் ஐபிஎல் தொடரில் புதிய யுத்திகளை பயன்படுத்தி விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருகிறார்கள். நாங்கள் சிக்ஸர் அடிக்க மாட்டோம். பௌண்டரிகள் தான் அடிப்போம் என்று பைத்தியக்காரத்தனமாக அவர்கள் பேசி வருகிறார்கள். இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோன்று புதிய பயிற்சியாளராக சிஎஸ்கே அணியின் நட்சத்திர முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவை கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் சமூக வலைத்தளத்தில் ரெய்னா புதிய பயிற்சியாளராக வரப்போகிறார் என்று ஒரு செய்தி வைரல் ஆனது. ஆனால் அது உண்மை இல்லை என்று தெரிகிறது.
சிஎஸ்கே அணிக்கும் ரெய்னாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மையாக இருந்தாலும், அண்மையில் சிஎஸ்கே அணி நிர்வாகிகளிடம் ரெய்னா மீண்டும் நட்பு உறவில் இருப்பதாக தெரிகிறது. கடந்த சிஎஸ்கே போட்டியை கூட ரெய்னா சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உடன் இணைந்து மைதானத்தில் போட்டியை பார்த்தார்.
இதனை வைத்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வரப்போகிறார் என்ற செய்திகள் வலம் வருகிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் ரெய்னா போன்ற ஒரு அதிரடி வீரர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வருவது சிறப்பான விஷயமாக இருக்கும் என்றும், தோனி ஓய்வு பெற்றுவிட்டு சிஎஸ்கே அணியின் மென்டராக பதவி வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.