கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ரன் சேர்த்து வந்தனர். ஆனால் போட்டியை பார்ப்பதை விட ப்ரீத்தி ஜிந்தா நேரலையில் ஒளிபரப்பில் காட்டப்பட்ட போது அதை பார்த்து நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர்.
மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை விட ப்ரீத்தி ஜிந்தா தான் அழகு என விவாதமும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றபோது முதல் இந்த விவாதம் ரசிகர்கள் மத்தியில் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அதிக சுவாரசியம் இன்றி செல்வதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், சில நெட்டிசன்களின் கவனம் ப்ரீத்தி ஜிந்தா, காவ்யா மாறன் ஆகியோர் மீது திரும்பி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த இரண்டு அணிகள் விளையாடும் போது அந்த அணிகளை பற்றி பேசுவதை விட ப்ரீத்தி ஜிந்தா மற்றும் காவ்யா மாறனை பற்றி பேசுவது அதிகமாக உள்ளது.
நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினார்கள். பிரியான்ஷ் ஆர்யா நான்கு சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகள் அடித்து 35 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்திருந்தார். பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஆறு பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்திருந்தார். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் சேர்த்தனர்.
இவர்களது ஆட்டம் அதிரடியாக இருந்த நிலையிலும், ப்ரீத்தி ஜிந்தா அவர்கள் அரை சதங்கள் அடித்தபோதும், சிக்ஸர்கள் அடித்தபோதும் எழுந்து நின்று கைதட்டிய காட்சிகள் நேரலையில் காட்டப்பட்டபோது, ரசிகர்கள் ப்ரீத்தி ஜிந்தாவை புகழ்ந்து கொண்டிருந்தனர். ஒருவர் 'கடவுளின் படைப்பில் இவர்தான் மிகவும் அழகானவர்' என்று கூறியிருந்தார்.
மற்றொருவர் 'இவர்தான் ஐபிஎல் உரிமையாளர்களில் மிகவும் அழகானவர்' எனக் கூறியிருந்தார். மற்றொரு ரசிகரோ, ப்ரீத்தி ஜிந்தா 'எந்த காலத்திலும் ஒரே மாதிரிதான் இருப்பார்' என, அவர் வயதான நிலையிலும் அழகாக இருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். ஈடன் கார்டனின் அழகான ப்ரீத்தி ஜிந்தா என சில ரசிகர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனிடையே இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.