சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக விளையாடி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் விஜய் சங்கரை அவுட் ஆகாமல் பார்த்துக் கொண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வென்றதற்காக அந்த அணியின் கேப்டன் அக்சர் பட்டேலை கிண்டலாக பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
விஜய் சங்கர் எல்பிடபிள்யூ அவுட் ஆனபோது ரிவ்யூ கேட்காமல் விட்டதற்காகவும், அவர் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டதற்காகவும் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேலை பாராட்டும் வகையில் மீம்ஸ் போட்டு விஜய் சங்கரை கேலி செய்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 183 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்தபோது, ரச்சின் ரவீந்திரா 3 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், டெவோன் கான்வே 13 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 5 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
நான்காம் வரிசையில் இறங்கிய விஜய் சங்கர் மிகவும் நிதானமாக ஆடி வந்தார். சிவம் துபே 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜாவும் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு தோனி மற்றும் விஜய் சங்கர் இணைந்து மிகவும் ஆமை வேக ஆட்டத்தை ஆடினர். விஜய் சங்கர் பத்தாவது ஓவரில் விப்ராஜ் நிகாம் வீசிய பந்தில் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அதை குல்தீப் யாதவ் தவற விட்டார்.
அடுத்து பதிமூன்றாவது ஓவரில் விஜய் ஷங்கர் மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அப்போது ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அந்த கேட்சை தவறவிட்டார். அப்போது அக்சர் பட்டேல் அதற்காக பதற்றப்படாமல் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது அது ஏன் என பலருக்கும் புரியவில்லை.
விஜய் சங்கர் ஆடுகளத்துக்கு மூன்றாவது ஓவரில் வந்த போது ஆட்டம் இழந்திருக்க வேண்டும். அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே அவர் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதற்கு ரிவ்யூ கேட்கவில்லை. பந்து முதலில் பேட்டில் பட்டதாக நினைத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அதற்கு ரிவ்யூ கேட்கவில்லை. அது மட்டும் நடந்திருந்தால் விஜய் சங்கர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியிருப்பார்.
ஆனால் அவரை ஆட வைத்ததன் மூலம் சிஎஸ்கே அணியின் வியூகத்தை மாற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்றதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டியில் விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். பார்ப்பதற்கு இது சிறந்த ஸ்கோர் போல இருந்தாலும், அவர் நீண்ட நேரம் பந்துகளை வீணடித்து வெற்றிக்கு தேவையான ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்பதை தாண்டியதற்கு பிறகுதான் அதிரடி ஆட்டத்தையே ஆடினார்.
இதை வைத்து தான் அக்சர் பட்டேல் சாமர்த்தியமான கேப்டன், விஜய் சங்கரை அவுட் ஆகாமல் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றார் என ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.