அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பை வென்றது. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு இந்திய ராணுவம் நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" பெரிய அளவில் உதவி செய்ததாக பலரும் கூறி வருகின்றனர்.
அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் இது பற்றி ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இது பற்றி என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிக வெற்றிகளைப் பெற்றிருந்தது. புள்ளிப் பட்டியலிலும் முன்னிலையில் இருந்தது. கடைசி மூன்று லீக் போட்டிகள் மீதமிருந்த நிலையில், அந்த அணியில் பல முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
அந்த அணியில் இடம் பெற்று இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருந்தார். அவர் தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக இருந்தார்.
மேலும், அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அவரால் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட முடியாத சூழ்நிலை இருந்தது. கேப்டனும் இல்லாமல், அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரும் இல்லாமல் எப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் என அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கதை முடிந்தது என மற்ற அணியின் ரசிகர்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர். இந்த நிலையில் தான், மே 7 அன்று அதிகாலையில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பதிலடித் தாக்குதலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது நடத்தியது. இதை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவானது.
அதனால் ஐபிஎல் தொடர் 10 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. அந்த இடைவேளையில் ஜோஷ் ஹேசில்வுட் தனது காயத்திலிருந்து மீண்டு வந்தார். கேப்டன் ரஜத் படிதாரும் பேட்டிங் செய்யும் அளவுக்கு முன்னேற்றத்தை அடைந்தார். இதனிடையே, மற்ற இரண்டு வீரர்கள் ஆன டிம் டேவிட் மற்றும் தேவ்தத் படிக்கல் காயத்தில் சிக்கினர்.
நல்ல வேளையாக ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ரஜத் படிதார் அணிக்கு திரும்பி விட்டதால், அடுத்து ஏற்பட்ட காயங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதைத்தான் அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். "ஆபரேஷன் சிந்தூர்" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை என்றாலும், அப்போது கிடைத்த இடைவெளியை வைத்துத்தான் தங்கள் அணியின் வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வந்தனர் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.