அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நெஹால் வதேரா மற்றும் ஷஷாங்க் சிங் பேட்டிங்கை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் 191 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 24 ரன்கள் எடுத்தும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
ஜோஷ் இங்லிஸ் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. இந்த நிலையில் நான்காம் வரிசையில் இறங்கிய நெஹால் வதேரா மற்றும் ஆறாம் வரிசையில் இறங்கிய ஷஷாங்க் சிங் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருந்தனர்.

அப்போது அதிரடியாக ஆடி ரன் ரேட் விகிதத்தை குறைக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருவரும் ஆமை வேகத்தில் ஆடினார்கள். குறிப்பாக 13வது ஓவரில் 3 ரன்களும், 14வது ஓவரில் 5 ரன்களும் எடுத்தனர். இந்த இரண்டு ஓவர்களிலும் அவர்கள் ரன் சேர்க்காததால், போட்டி முழுமையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பக்கம் சாய்ந்தது. அதன் பிறகு ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கும் அதிகமாக சேர்க்க வேண்டிய அழுத்தம் ஏற்பட்டது.
அதன் பிறகு நெஹால் வதேரா 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். ஷஷாங்க் சிங் கடைசி ஓவரில் அதிரடிக்கு மாறினார். அவர் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தாலும், அந்த இரண்டு ஓவர்கள் அவர் பந்துகளை வீணடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியை பாதித்தது.
கடைசி ஓவரில் 29 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஷஷாங்க் சிங் அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரன் எடுக்கவில்லை. கடைசி நான்கு பந்துகளில் மட்டும் மூன்று சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லாமல் போனது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.