அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடும் அணி ஆகும்.
200 ரன்களுக்கு மேல் ரன்கள் குவித்தால், அது நிச்சயம் ஆர் சி பி அணிக்கு பலமாக மாறிவிடும். இந்த சூழலில் ஆர்சிபி அணி இந்த தொடரில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் தொடக்க ஜோடி தான். விராட் கோலி உடன் இணைந்து இங்கிலாந்து வீரர் பில் சால்ட் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.

இந்த 12 போட்டிகளில் பில் சால்ட் 387 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய சராசரி 35 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் 175 என்ற அளவில் இருந்தது. அண்மையில் நடைபெற்ற குவாலிபயர் ஆட்டத்தில் கூட 27 பந்துகளில் 56 ரன்கள், பில் சால்ட் அடித்தார்.இதில் ஆறு பவுண்டரியும், மூன்று சிக்ஸரும் அடங்கும்.
இதனால் பில் சால்ட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த பஞ்சாப் அணி திட்டம் போட்டு இருந்தது. ஆர்ஸ்தீப் பந்துகளை வீசும் போது பில் சால்ட் அதனை பைன் லெக் திசையில் சிக்சர் அடித்தார். தாம் எதிர்கொண்ட ஒன்பது பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என பில் சால்ட் அதிரடியை காட்டிய நிலையில் அவர் தூக்கி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஓடி கேட்ச் பிடித்தார்.
இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 18 ரன்களுக்கு ஆர்சிபி அணி முதல் விக்கெட்டை இழந்தது. இதனை அடுத்து விராட் கோலியும் மாயங் யாதவும் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். எனினும் ஆர்ஸ்தீப் சிங் வீசிய இரண்டு ஓவரில் 24 ரன்கள் சென்றது.
இது பஞ்சாப்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இறுதிப்போட்டியில் கடும் நெருக்கடி இருக்கும் என்பதால் 160 முதல் 180 ரன்கள் என்று இலக்கை எட்டுவதே இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு நெருக்கடியாக இருக்கும். இதனால், ஆர்சிபியை கட்டுப்படுத்த வேண்டிய பணி ஸ்ரேயாஸ்க்கு இருக்கிறது.