அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்னும் இறுதிப் போட்டியில் விளையாடாத நிலையில், அதற்கு முன்பே அந்த அணியின் வீரர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இது இறுதிப் போட்டி தொடர்பான கொண்டாட்டம் அல்ல. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார் மற்றும் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் கேக் வெட்டி கொண்டாடும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, கேப்டன் ரஜத் படிதார் முகத்தில் ஜிதேஷ் சர்மா கேக்கை அள்ளி பூசினார். அதன் பிறகு அந்த இடமே கலகலப்பாக மாறியது.

ஒவ்வொருவரும் கேக்கை எடுத்து தினேஷ் கார்த்திக் மற்றும் ரஜத் படிதார் முகத்தில் பூசினார்கள். விராட் கோலியும் கேக்கை எடுத்து பூசினார். பின்னர், விராட் கோலி மீதும் கேக்கை பூசுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. லியாம் லிவிங்ஸ்டன் கோலியை பிடித்துக் கொண்டு ஜிதேஷை பார்த்து கேக்கை பூசுமாறு கூறினார்.
சில நிமிடங்களில் அந்த இடமே குதூகலமாக மாறியது. பின்னர், அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கோலியை பார்த்து கையேடுத்துக் கும்பிட்டு, இத்துடன் கேக் கொண்டாட்டத்தை நிறுத்தலாம் என முறையிட்டார். இந்தக் காட்சிகள் ஆர்சிபி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த அணி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன் நடந்த மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றதில்லை. 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கோப்பை வென்றதில்லை. அது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அதில் நான்கு முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. தற்போது முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வெல்லுமா என்று பார்க்கலாம்.