அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பை வென்று வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களும் வேதனையில் உள்ளனர். ஏனெனில், இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர்.
பலரும் ஸ்ரேயாஸ் ஐயர் பற்றியும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் மீதான நம்பிக்கையையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாதது பற்றியும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைத் தான் பிடித்தது.

அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோர்வடைந்திருந்த நிலையில், தங்களின் எதிரி அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக எந்தெந்த அணிகள் ஆடுகின்றனவோ, அவற்றுக்கு ஆதரவை அளித்து வந்தார்கள். இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியபோது, சிஎஸ்கே ரசிகர்கள் பஞ்சாப்பை ஆதரித்திருந்தார்கள்.
இதை அடுத்து இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதை ஏற்க முடியாமல் சிஎஸ்கே ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி இருந்தது. அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிஎஸ்கே அணி மற்றும் அதன் ரசிகர்களை நடத்திய விதங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக மாறியது.
பல சிஎஸ்கே ரசிகர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் துன்புறுத்தி இருந்தனர், கேலி செய்திருந்தனர். அதனாலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான மனநிலையை பல சிஎஸ்கே ரசிகர்களும் எடுத்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றுவிட்டது. இதை அடுத்து மீம்ஸ் வெளியிட்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர் சில சிஎஸ்கே ரசிகர்கள்.