அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை "கிரிமினல்" என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெறாததற்கு ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக பேட்டிங் செய்யாததுதான் முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்கள் எடுத்தது. அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்ததை அடுத்து அந்த அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சரியாக ஃபினிஷ் செய்ய முடியாமல் வீரர்கள் திணறினார்கள். இறுதியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைந்து, ஐபிஎல் கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.
இது குறித்துப் பேசிய யோகராஜ் சிங், "இந்த இறுதிப் போட்டியில் ஒரே ஒரு கிரிமினல் மட்டுமே இருக்கிறார். அது ஸ்ரேயாஸ் ஐயர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன். அவர் எப்போதெல்லாம் நன்றாக விளையாடி இருக்கிறாரோ, அப்போதெல்லாம் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கிறது. யார் ஒருவரும் போட்டியை விட பெரியவர் இல்லை."
"அவருக்குப் பிறகு அந்தப் போட்டியில் ஆடுவதற்கு சரியான வீரர்கள் இல்லை. இந்திய அணியில் இரண்டு சிறந்த ஃபினிஷர்கள் மட்டுமே இருந்தார்கள்; ஒருவர் தோனி, மற்றொருவர் யுவராஜ் சிங். இருவரது வெற்றி சதவீதம் 92 ஆகும். யுவராஜ் சிங்கின் வெற்றி சதவீதம் 98 ஆகும். யுவராஜ் சிங் 72 போட்டிகளை தனி ஆளாக வென்று கொடுத்து இருக்கிறார்."
"நீங்களே சொல்லுங்கள், இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி இருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருக்கும். விராட் கோலி அந்தப் போட்டியில் 43 ரன்கள் தான் எடுத்தார். ஆனால், அவர் 80 ரன்களை எடுத்திருக்கலாம். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தோற்றதற்கு ஒரு வீரர் மட்டுமே காரணம். அது அந்த அணியின் கேப்டன். எனக்கு நிறைய கோபம் வருகிறது. நேற்று என்ன நடந்தது என்பதை யாரும் பார்க்க மாட்டார்கள். நாளை என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இன்று என்ன நடக்கிறதோ, அதைப் பற்றி மட்டும் தான் மக்கள் பேசுவார்கள்," என்றார் யோக்ராஜ் சிங்.