மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றும் முடிவடைந்திருக்கிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய 11 வீரர்கள் அடங்கிய 'ஐபிஎல் பிளாப் லெவன்' அணி என்ன என்று பார்க்கலாம். 2025 ஐபிஎல் தொடர் துவங்கும் முன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றிய 11 வீரர்கள் அடங்கிய அணிதான் இது.
இந்த அணியின் துவக்க வீரர்களாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குவின்டன் டி காக் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஃபிரேசர் மெக்கர்க்: 6 இன்னிங்ஸ்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 9 என்பதாக இருந்தது.
குவின்டன் டி காக்: 8 இன்னிங்ஸ்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 21.71 என்பதாக இருந்தது. இருவருமே ஏமாற்றம் அளித்தனர்.
மூன்றாம் வரிசையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கடேஷ் ஐயர் தான் இடம் பெற்றிருக்கிறார். வெங்கடேஷ் ஐயர்: அவர் ஏலத்தில் 23.75 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டிருந்தார். ஆனால், இந்த ஆண்டு அவர் 7 இன்னிங்ஸ்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இடம் பிடித்திருக்கிறார். இவரே இந்த மோசமான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுகிறார். ரிஷப் பண்ட்: இவர் 13 இன்னிங்ஸ்களில் 269 ரன்கள் எடுத்தார். இவரது சராசரி 24.45 என்பதாக இருக்கிறது.
ஆனால், லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததற்குப் பிறகு, கடைசி லீக் போட்டியில் எந்த அழுத்தமும் இல்லாத போது அவர் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அதை நீக்கிவிட்டுப் பார்த்தால், ரிஷப் பண்ட்டின் செயல்பாடு மோசமாகவே இருந்தது. பல போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்ததற்கு ரிஷப் பண்ட் சரியாக பேட்டிங் ஆடாததும் முக்கிய காரணமாக இருந்தது.

ஐந்தாம் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் ஹூடா இடம் பிடித்திருக்கிறார். தீபக் ஹூடா: இவர் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் பேட்ஸ்மேன்களில் மோசமான சராசரி வைத்திருப்பவர் இவரே. வெறும் 6.2 என்ற பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.
ஆறாம் வரிசையில் நிதிஷ் குமார் ரெட்டி இடம் பிடித்திருக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டி: 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்டார். அவரது அதிரடி பேட்டிங் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 11 இன்னிங்ஸ்களில் 182 ரன்கள் மட்டும் எடுத்திருக்கிறார். குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 118.95 என்பதாக மோசமாக உள்ளது.
ஏழாம் வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி இடம் பிடித்திருக்கிறார். எம்.எஸ். தோனி: அவர் பல ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக பினிஷிங் செய்திருந்தாலும், இந்த ஆண்டு அவரது பேட்டிங் சராசரியாகவே அமைந்தது. 13 இன்னிங்ஸ்களில் அவர் 196 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரால் பல போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியவில்லை.
சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு தோனியால் உதவ முடியவில்லை. தோனி ஆடிய சிறப்பான ஆட்டம் என்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தது மட்டுமே. அந்தப் போட்டியிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
எட்டாம் வரிசையில் டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மோகித் ஷர்மா இடம் பிடித்திருக்கிறார். மோகித் ஷர்மா: இவர் 8 இன்னிங்ஸ்களில் வெறும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஒன்பதாவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பிடித்திருக்கிறார். முகமது ஷமி: ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஷமி, இந்த ஆண்டு 9 இன்னிங்ஸ்களில் வெறும் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். இது மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது.
அடுத்து பத்தாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்திருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின்: ஏலத்தில் 9.75 கோடி ரூபாய் என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அஸ்வின், 9 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.13 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
11வது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இருக்கிறார். துஷார் தேஷ்பாண்டே: அவர் 10 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். ராஜஸ்தான் அணியின் பேட்டிங் பல போட்டிகளில் நன்றாக இருந்தது. அந்த அணியின் பவுலிங் தான் காலை வாரிவிட்டது. அதற்கு துஷார் தேஷ்பாண்டேவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.
2025 ஐபிஎல் ஃபிளாப் அணி: ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், குவின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன்) , தீபக் ஹூடா, நிதிஷ் குமார் ரெட்டி, எம்.எஸ். தோனி, மோகித் ஷர்மா, முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் துஷார் தேஷ்பாண்டே