பெங்களூர்: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் இம்முறை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். லக்னோ அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜாகீர் கான், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கொயங்கா ஆகியோர் இணைந்து கேஎல் ராகுலை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
இதனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் கேஎல் ராகுல் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்கம், மிடில் என்று எந்த பேட்டிங் ஆர்டரிலும் விளையாடக் கூடியவர் என்பதால், அவரை வாங்குவதற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இம்முறை மீண்டும் ஆர்சிபி அணியால் கேஎல் ராகுல் வாங்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகிறது.

ஏனென்றால் அந்த அணிக்கு கேப்டன் ஒருவர் தேவைப்படுவதோடு, விராட் கோலிக்கு பின் ஒரு நட்சத்திர வீரரை அந்த அணிக்கு கொண்டு வர வேண்டியதன் தேவையும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் ரசிகர்களையும் எளிதாக கவர முடியும் என்று பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கேஎல் ராகுல் பேசுகையில், 2013ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அதன்பின் 2016ஆம் ஆண்டு மீண்டும் ஆர்சிபி அணிக்குள் சென்றேன். அதுவொரு அழகான பயணமாக இருந்தது. ஆர்சிபி அணிக்காக விளையாடும் போது மகிழ்ச்சியாக இருந்தேன் என்று சொல்ல வேண்டும். பெங்களூர் என்னுடைய சொந்த ஊர். அதனால் ஆர்சிபி ரசிகர்கள் எப்போதும் கன்னட வீரராகவே பார்ப்பார்கள்.
சில நேரங்களில் எந்த விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது மட்டும் போதாது. எப்போதும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக முயற்சித்திருக்கிறேன். இம்முறை கம்பேக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய ஆட்டத்தை இன்னும் சிறப்பாக்குவதற்கான வழியை ஆராய்வேன். என்ன பொறுப்பு, எந்த ரோல் என்றாலும் கவலையில்லை. இம்முறை ஐபிஎல் தொடரை புதிதாக தொடங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
என் முன் இருக்கும் வாய்ப்புகளை காண்பதற்கு ஆவலாக இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கும் சூழல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அணியின் சூழல் தன்மையாக இருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் சில நேரங்களில் நல்ல சூழலில் இருப்பது அனைவருக்கும் அவசியம். கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட் அணியில் இருந்து தள்ளி இருக்கிறேன்.
ஒரு வீரராக எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை நன்றாக அறிவேன். அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். இம்முறை கிரிக்கெட்டை கொண்டாட்டமாக விளையாட வேண்டும்./ஐபிஎல் தொடருக்கு பின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதேபோல் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் நானும் விராட் கோலியும் 2016 ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து ஏராளமான முறை பேசி இருக்கிறோம்.
அந்த இறுதிப்போட்டியில் நானோ அல்லது விராட் கோலியோ கூடுதலாக சில நேரம் பேட்டிங் செய்திருந்தால், ஆர்சிபி வெற்றிபெறும் வாய்ப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். அந்த சீசனில் கடைசி இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் ஏறி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றோம். சின்னச்சாமி மைதானத்தில் வெல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அது மிஸ்ஸாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.