மும்பை: ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் தொடர்பாக பரபரப்பான சில விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. சில வெளிநாட்டு வீரர்கள், ஏலத்தில் வாங்கப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்ட பின் ஐபிஎல் தொடர் துவங்கும் முன் தொடரை விட்டு வெளியேறுகின்றனர்.
வெளிநாட்டு வீரர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என ஐபிஎல் உரிமையாளர்கள் அனைவரும் பிசிசிஐ-இடம் முறையிட்டு இருக்கின்றனர். இதை அடுத்து இனி வரும் காலங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் 8 வெளிநாட்டு வீரர்கள் வரை இடம் பெறலாம். அவர்களில் நான்கு வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் களம் இறங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளை காணும் ரசிகர்களுக்கும் ஒரு சர்வதேச போட்டியை பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்கிறது என்பதற்காக இந்த முறை அமலில் உள்ளது.
வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்த சில நட்சத்திர வீரர்களுக்கு இந்திய வீரர்களை விட அதிக சம்பளமும் அளிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அந்த வீரர்கள் ஐபிஎல் தொடர் துவங்க சில தினங்கள் இருக்கும் போது, தாங்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார்கள்.
குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் இதுபோல செய்து இருக்கிறார்கள். 2024 ஐபிஎல் தொடருக்கு முன் எட்டு வீரர்கள் இதுபோல கடைசி நேரத்தில் விலகினார்கள். அதனால், அந்த ஐபிஎல் அணிகள் பாதிக்கப்பட்டன. குறுகிய காலத்தில் மாற்று வீரர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில், ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் இதுபோல கடைசி நேரத்தில் விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் புதிய விதிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இனி ஒரு வெளிநாட்டு வீரர் கடைசி நேரத்தில் விலகினால் அவர் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என விதிமுறை கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது. இனியும் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து தங்கள் இஷ்டத்துக்கு கடைசி நேரத்தில் விலக முடியாது என கூறப்படுகிறது.