மும்பை: பஞ்சாப் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்துள்ளது. இரு தரப்பும் இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகி வந்த சூழலில், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவித்து ஆச்சரியம் கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் குறித்த விதிமுறைகளை பிசிசிஐ தீவிரமாக தயார் செய்து வருகிறது. இம்மாத இறுதியில் ஐபிஎல் தொடருக்கான ரீடென்ஷன் பாலிசி குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு அணிக்கும் 4 ரிடென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம் வாய்ப்புகளை பிசிசிஐ அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூ-வும் ரூ.10 கோடி அளவிற்கு அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி முன்வைத்த பழைய விதியை மீண்டும் கொண்டு வரவும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதனிடையே ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஏனென்றால் டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், 7 ஆண்டுகளுக்கு பின் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த ட்ர்வோர் பேலிஸ் உடனான ஒப்பந்தத்தை அந்த அணி நிர்வாகம் புதுப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இரு அணி நிர்வாகங்களும் புதிய பயிற்சியாளரை தேடி வருகின்றனர்.
டெல்லி அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்வதில் மும்முரமாக உள்ளது. ஆனால் பஞ்சாப் அணி தரப்பில் மீண்டும் வெளிநாட்டு பயிற்சியாளரை ஒப்பந்தம் செய்யவே ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே சில ஐபிஎல் அணிகளுடன் மீண்டும் பணியாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். 2 வாரங்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று ரிக்கி பாண்டிங் கூறியிருந்த நிலையில், பஞ்சாப் அணியுடன் கைகோர்த்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல் பஞ்சாப் அணியில் சஞ்சய் பங்கர், சுனில் ஜோஷி உள்ளிட்டோர் பணியாற்றி வருவதால், ரிக்கி பாண்டிங் அவர்களுடன் இணைந்து கொள்வார் என்று பார்க்கப்படுகிறது. துணைப் பயிற்சியாளர்களாக சிலரை ரிக்கி பாண்டிங் அழைக்கவும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் டெல்லி அணி 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் பஞ்சாப் அணியோ 2014ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. இதனை ரிக்கி பாண்டிங் மாற்றிக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஷிகர் தவான் ஓய்வு பெற்றிருப்பதால், புதிய கேப்டன் ஒருவரை கொண்டு வர வேண்டிய கட்டாயமும் அந்த அணிக்கு உள்ளது. இதனால் பஞ்சாப் அணியை உருவாக்குவதில் ரிக்கி பாண்டிங் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.