மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2020ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். அதன்பின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடி வந்த தோனி, கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று சாதனை படைத்தார். கடந்த சீசனில் கேப்டன் பொறுப்பையும் தோனி ராஜினாமா செய்து, அந்த பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் கொடுத்தார்.
இதனால் கடந்த சீசனே தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தோனி கூடுதலாக ஒரு சீசனில் விளையாடுவதற்காக ஐபிஎல் விதிகளில் மாற்றத்தை கொண்டுவர சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி 5 ஆண்டுகளை கடந்த வீரர்களை இனி அன்-கேப்ட் வீரர்களாக கருதி ரீடெய்ன் செய்யும் வகையில் விதியை கொண்டு வர கோரிக்கை வைத்தது.

அதற்கு ஐபிஎல் நிர்வாகமும் செவிசாய்க்க, சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை ரூ.4 கோடிக்கு ரீடெய்ன் செய்துள்ளனர். இதனால் இந்த சீசனே தோனியின் கடைசி சீசனாக அமையும் என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருந்தாலும் தோனியின் ஃபிட்னஸ் குறித்த சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஏனென்றால் கடந்த 2 சீசன்களாகவே தோனியின் காலில் காயம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஃபிட்னஸ் குறித்து தோனி பேசுகையில், என்னால் முன்பை போல் ஃபிட்னெஸ் உடன் இருக்க முடியவில்லை. ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக ஏராளமான விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. உணவு பழக்கத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் விளையாடுவதற்காக இன்னும் சில தேவைகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்கள் அளவிற்கு பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்களுக்கான ஃபிட்னஸ் தேவையும் அவ்வளவு இல்லை. எனது வாழ்வில் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்கு அதிக உதவியாக இருப்பது மற்ற விளையாட்டுகள் தான். உணவு சாப்பிடுவதற்கும், உடல் பயிற்சி கூடத்திற்கும் இடையில் ஏராளமான விளையாட்டுகளை விளையாடி வருகிறேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் கால்பந்து ஆகிய மூன்றையும் விளையாடி வருகிறேன். அதுதான் ஃபிட்னஸ் உடன் இருக்க உதவியாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், எனக்கு அதிக நேரம் ஓய்வு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கை அப்படியில்லை. அதேபோல் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை மிஸ் செய்கிறீர்களா என்று கேட்கிறார்கள்.
ஒருமுறை முடிவு எடுத்து செயல்படுத்திய பின் அதனை நினைத்து வருந்துவது தேவையில்லாத விஷயம். ஏனென்றால் முடிவு எடுப்பதற்கு முன்பே அதுகுறித்து ஏராளமாக சிந்தித்திருப்போம். இந்திய அணிக்காக விளையாடி பங்களிப்பு செய்ய முடிந்தது மகிழ்ச்சி. மற்றபடி நண்பர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு அதிக நேரம் செலவழிக்கிறேன். மோட்டார் சைக்கிள் மூலமாக அதிக தூரம் பயணிப்பதில்லை என்றாலும், அதனை செய்வது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
எனது வாழ்க்கையில் நான் அடைந்த வெற்றிக்கு பெற்றோர் முதன்மை காரணமாக இருந்தனர். ஏனென்றால் அவர்கள் ஏராளமான விஷயங்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அவர்களின் வளர்ப்பு காரணமாகவே இப்போதும் ஒழுக்கத்துடன் இருக்கிறேன். வாழ்க்கையில் நண்பர்கள் ரொம்ப முக்கியம். பள்ளிப் பருவத்தில் நண்பர்கள் வட்டாரம் மாறிக் கொண்டே இருக்கும். 3வது படிக்கும் போதிருந்து பிளஸ் 2 வரை நண்பர்கள் மாறிக்கொண்டே இருந்தனர்.
நண்பர்கள் தான் வாழ்க்கையில் நாம் யாராக வருகிறோம் என்பதற்கு காரணமாக அமைவார்கள். எந்தவொரு கடினமான சூழல்களிலும் அடுத்த கட்டத்தை நோக்கி திரும்புவதற்கான முடிவை சரியாக எடுக்க காரணமாக அமைவார்கள். அதனால் என் வாழ்க்கையில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.