சென்னை: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கான ரிடென்ஷன் விதிமுறைகள் வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் சென்னை அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள 6 வீரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல் குறைவாக வீரர்களை ரீடெய்ன் செய்யும் அணிகள், மெகா ஏலத்தின் போது ஆர்டிஎம் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் வரையும், உள்ளூர் வீரர்களில் அதிகபட்சமாக 2 வீரர்கள் வரையும் ரீடெய்ன் செய்ய முடியும்.

சர்வதேச வீரர்களில் எத்தனை இந்திய வீரர்கள், எத்தனை வெளிநாட்டு வீரர்களை வேண்டுமானாலும் தக்க வைத்து கொள்ளலாம். அதேபோல் இந்திய வீரர்களில் இந்திய அணிக்காக விளையாடி 5 ஆண்டுகள் கடந்த வீரர்களை அன்-கேப்ட் வீரராக ரீடெய்ன் செய்யவும் பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏனென்றால் அன்-கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி தாராளமாக தோனியை ரீடெய்ன் செய்யலாம். ஏனென்றால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தோனியை நிச்சயம் சிஎஸ்கே அணி அன்-கேப்ட் வீரராக தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ரீடெய்ன் செய்ய வாய்ப்புள்ள மற்ற 5 வீரர்கள் வீரர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இருவரும் நிச்சயம் தக்க வைக்கப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பதிரானாவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தக்க வைக்கும்.
கடைசி 2 வீரர்களில் யார் தக்க வைக்கப்படுவார்கள் என்பதே ரசிகர்கள் குழப்பமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சிவம் துபே, ஷர்துல் தாக்கூர், ரச்சின் ரவீந்திரா, துஷார் தேஷ்பாண்டே, டொவன் கான்வே, தீபக் சஹர் என்று ஏராளமான வீரர்கள் இருக்கின்றனர். அதில் சிவம் துபே தக்க வைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றாக் கடைசி 3 சீசன்களில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக 1,103 ரன்களை விளாசி இருக்கிறார். கடைசி வீரராக ரச்சின் ரவீந்திராவை தக்க வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை ஸ்பின்னர் என்பதால் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருப்பார். 24 வயது மட்டுமே எட்டியிருப்பதால், அடுத்த சுரேஷ் ரெய்னாவாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நியூசிலாந்து வீரர் என்பதால், பயிற்சியாளர் பிளெம்மிங் நிச்சயம் அவரை ரீடெய்ன் செய்ய விரும்புவார். இதனால் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா, சிவம் துபே, ரச்சின் ரவீந்திரா மற்றும் தோனி ஆகிய 6 வீரர்களை தக்க வைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் 5 வீரர்களை தக்க வைத்து கொண்டு, மெகா ஏலத்தில் ஒரு ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த முடிவு எடுக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.