மும்பை: கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. தற்போது ரீடென்ஷன் பட்டியலை கேகேஆர் அணி நிர்வாகம் தயார் செய்து வரும் சூழலில், ஸ்ரேயாஸ் ஐயர் தக்க வைப்பதற்காக முன்னாள் ஆலோசகரான கவுதம் கம்பீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2014, 2016 ஆகிய ஆண்டுகளுக்கு பின் கேகேஆர் அணி கடந்த ஐபிஎல் சீசனில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேகேஆர் அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்றார். இவருக்கு உறுதுணையாக ஆலோசகர் கவுதம் கம்பீர், பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் 5 சர்வதேச வீரர்களையும், ஒரு உள்ளூர் வீரரையும் தக்க வைக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அதில் கேகேஆர் அணியை பொறுத்தவரை சுனில் நரைன், ஆன்ட்ரே ரஸல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஹர்சித் ராணாவை தக்க வைக்க ஆலோசித்திருக்கிறது.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் அளிக்க முடியாது என்று கேகேஆர் அணி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சுனில் நரைன், ரஸல் இருவருக்கும் ரூ.18 கோடியும், ரிங்கு சிங் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ரூ.14 கோடியும் ஒப்பந்தம் அளிக்கப்படவுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர்-க்கு ரூ.11 கோடி ஒப்பந்தம் அளிக்க முன் வந்துள்ளது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் சோகத்தில் இருந்திருக்கிறார். கேகேஆர் அணியின் நம்பர் 1 ரீடென்ஷனான இருக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். இதன்பின் கேகேஆர் சிஇஓ வெங்கி மைசூர் மற்றும் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் இருவரும் ஸ்ரேயாஸ் ஐயருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் முழு முடிவும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயரை ரிலீஸ் செய்வதற்கான திட்டத்திற்கு கேகேஆர் அணி நகர்ந்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் மற்றும் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இருவருக்கும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேகேஆர் அணி நிர்வாகத்துடன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைப்பதற்காக கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் இருவரும் பேசியதாக தகவல் வெளி வந்துள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த ”டீம் மேன்” என்று கம்பீர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து கொண்டு கவுதம் கம்பீர் கேகேஆர் அணிக்காக சமாதானம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பதை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருக்கும் நிலையில், கம்பீரின் செயல்கள் மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.