மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டதாக பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டுள்ள நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன் நான் தேடி சென்று மெசேஜ் அனுப்பிய பெண், தற்போது அவர்களாக முன் வந்து மெசேஜ் அனுப்பியதாக கூறி இருக்கிறார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ள 2வது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். பஞ்சாப் அணியால் ரூ.26.75 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரை வாங்குவதற்கு டெல்லி, கேகேஆர், பெங்களூர் உள்ளிட்ட அணிகள் போட்டிபோட்ட நிலையில், பஞ்சாப் அணி மிகப்பெரிய தொகைக்கு அவரை வாங்கி இருக்கிறது.

ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்த போது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் ஸ்ரேயாஸ் ஐயர் பணியாற்றி உள்ளார். இதனால் கேகேஆர் அணியை எப்படி 10 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை பெற வைத்தாரோ, அதேபோல் பஞ்சாப் அணியை 10 ஆண்டுகளுக்கு பின் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்றபடி ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கிலும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் இரட்டை சதம், சதம் என்று விளாசி தள்ளிய ஸ்ரேயாஸ் ஐயர், சையத் முஷ்டாக் அலி தொடரிலும் சதம், அரைசதம் என்று பொளந்து கட்டி வருகிறார். இவரின் அபார ஃபார்ம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் பொறுப்பும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. அதில், ஐபிஎல் தொடருக்கு முன்பாக எனக்கு தெரிந்த சில பெண் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் எனக்கு எந்த பதிலையும் அனுப்பியதில்லை.
ஆனால் ஐபிஎல் தொடருக்கு பின் அதே பெண் நண்பர்கள் எனக்கு ஒவ்வொரு நாளும் மெசேஜ் அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். இம்முறை அவர்களை போலவே நான் எந்த பதிலும் அளிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அறிமுகமான சீசனிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் 439 ரன்களை விளாசி பலரின் கவனத்தையும் திருப்பினார்.
அதன்பின் அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார். இவரின் தலைமையின் கீழ் டெல்லி அணி தொடர்ச்சியாக 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இருப்பினும் ரிஷப் பண்ட் எழுச்சி காரணமாக டெல்லி அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டார்.