மும்பை: 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, கேப்டன்சியை விராட் கோலியிடம் ஒப்படைத்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக தோனி செயல்பட்டு வந்த போது, ஒயிட் பால் கேப்டன்சியை எந்த காரணத்திற்காகவும் கேட்டுவிடாதே என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விராட் கோலியிடம் எச்சரிக்கை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன்சி தோனியிடம் இருந்து விராட் கோலியின் கைகளுக்கு மாறிய மிகச்சிறந்த மாற்றங்களில் ஒன்றாகும். ஏனென்றால் 2014ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக உடனடியாக விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டார்.

இருந்தாலும் ஒயிட் பால் கேப்டன்சியை தோனி கைவிடவில்லை. இதனால் இந்திய அணிக்கு 2 கேப்டன்கள் இருக்கும் நிலை உருவாகியது. ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அதிகாரத்திற்கான போட்டியில் இருவரும் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சம் பலருக்கும் இருந்தது. இதனிடையே 2016ஆம் ஆண்டின் போது ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்சியை விராட் கோலி கைப்பற்ற தீவிரமாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில், 2016ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான கேப்டன்சியை பெறுவதில் தீவிரமாக இருந்தார். சில விஷயங்களை விராட் கோலி பேசுவதிலேயே எங்களுக்கு எளிதாக புரிந்தது. இதனை உடனடியாக பேசி தீர்க்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி முடிவு செய்தார்.
உடனடியாக விராட் கோலியை அழைத்தார். அப்போது அவரிடம், இங்க பாரு விராட்.. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியை கேட்காமலேயே தோனி உன்னிடம் கொடுத்தார். அதற்கு நிச்சயம் மதிப்பு கொடுக்க வேண்டும். அதனால் சரியான நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்சியையும் அவர் கொடுப்பார். அதுவரை தோனிக்கான மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால், நாளை நீ கேப்டனாக வரும் போது, உனக்கான மரியாதை அணியில் கிடைக்காது. அதனால் என்ன நடந்தாலும் சரி.. அதற்கு மரியாதை அளிக்க வேண்டும். நீ கேப்டன்சியை நோக்கி நகராமல் இருக்கும் போது, அது நிச்சயம் உன்னை தேடி வரும் என்று தெரிவித்துள்ளார். இதன்பின் 2017ஆம் ஆண்டு தோனி ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்சியையும் விராட் கோலியிடம் ஒப்படைத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் விராட் கோலிக்கு கீழ் கடைசி வரை தோனி விளையாடிவிட்டு ஓய்வை அறிவித்தார். இதன் மூலமாக இருவருக்கும் இடையில் நல்ல நட்பும் உருவாகியது. அதேபோல் கேப்டன்சி பதவியை விராட் கோலி ராஜினாமா செய்த போது, தோனி மட்டுமே அவருக்கு ஆறுதலாக மெசேஜ் அனுப்பி இருந்தார். அதேபோல் டெஸ்ட் கேப்டன்சியை ராஜினாமா செய்த போதும், தோனிக்கு மட்டும் கோலி நன்றி கூறியிருந்தார்.
சிஎஸ்கே அணியில் தோனியின் மிகச்சிறந்த தளபதியாக எப்படி சுரேஷ் ரெய்னா இருந்தாரோ, அதேபோல் இந்திய அணியில் தோனியின் சிறந்த தளபதியாக விராட் கோலி இருந்தார். கடந்த ஐபிஎல் தொடரின் போது தோனி யாரிடமும் கைகுலுக்காமல் ஓய்வறை சென்ற போது, அவரை ஓய்வறையிலேயே சென்று நேரில் சந்தித்து விராட் கோலி ஆறுதல் கூறியதும் குறிப்பிடத்தக்கது.