மும்பை: 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட கிளென் மேக்ஸ்வெல், அந்த அணியின் ஆலோசகராக இருந்த வீரேந்தர் சேவாக்கால் எவ்வளவு சித்ரவதைகளை அனுபவித்தேன் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிளென் மேக்ஸ்வெல் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்ற பஞ்சாப் அணி, கேகேஆர் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அந்த சீசனில் மட்டும் கிளென் மேக்ஸ்வெல் 552 ரன்களை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்றார். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் நியமிக்கப்பட்டார்.

அதேபோல் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் கொண்டு வரப்பட்டார். இதுகுறித்து கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், சிறப்பாக பேட்டிங் செய்ததால், என்னை சுற்றி ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்று பஞ்சாப் அணி நிர்வாகம் விரும்பியது. அதனால் என்னை கேப்டனாக நியமித்தார்கள். அதன்பின் நானும் சேவாக்கும் சந்தித்த போது, எங்களின் திட்டங்களை பேசிக் கொண்டோம். இருவரும் ஒரே மாதிரியான சிந்தனையில் இருப்பதாக நினைத்தேன். ஆனால் களத்தில் வேறு மாதிரி இருந்தது.
அந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் நாங்கள் அணியில் உள்ள பிரச்சனைகளை கடந்து வென்றோம். ஆனால் வீரர்கள் பலரும் அணியில் என்ன நடக்கிறது என்று என்னிடம் நேரடியாக வந்து ஆலோசனை நடத்தினார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பிளேயிங் லெவனை முடிவு செய்வதற்காக நான் பயிற்சியாளர்களுடன் இணைந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கினேன். அதில் ஒவ்வொரு நபரும் தங்களின் பிளேயிங் லெவனை பதிவிடுவார்கள்.
அதன்பின் ஆலோசனை நடத்தி இறுதியில் பிளேயிங் லெவனை முடிவு செய்யலாம் என்பது திட்டம். ஆனால் சேவாக் மொத்தமாக நான் தான் பிளேயிங் லெவனை தேர்வு செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி-க்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு போட்டியில் விளையாடிய அவரை நீக்கலாம் என்று சேவாக் கூறினார். இதற்கு இயான் மோர்கன் எதிர்ப்பு தெரிவித்த போது, மோர்கனை நீக்கிவிட்டு ஹென்றியை விளையாட வைத்தார்கள்.
பஞ்சாப் அணி நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்வதே கடினமாக இருந்தது. அந்த சீசனின் கடைசி போட்டியில் நாங்கள் 73 ரன்களுக்கு ஆல் அவுட்டானோம். அந்தப் போட்டி முடிவடைந்த பின் நான் செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினேன். ஆனால் சேவாக் அவராகவே முன் வந்து நான் பார்த்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். அப்போது என்னை பொறுப்பில்லாத கேப்டன் என்று பழியை என் மீது திருப்பினார். அது எனக்கு வருத்தம் அளித்தது.
எனது செல்ஃபோனை எடுத்து சேவாக்கிற்கு, உங்களின் ரசிகர் ஒருவரை இழந்துவிட்டீர்கள் என்று மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவர், உன்னை போன்ற ஒருவர் என் ரசிகராக இருக்க தேவையில்லை என்று பதில் அனுப்பினார். அதன்பின் சேவாக், மேலும் ஒரு சீசனுடன் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் 2020ஆம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் அணியில் இணைந்தேன். ஆனால் அந்த சீசனில் என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது ஒத்துக் கொள்ள வேண்டும்.
அந்த சீசன் முடிவடைந்து ஆஸ்திரேலியா அணிக்காக ஆடும் போது ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸ் அடித்தேன். அதன்பின் யோசித்த போது, பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக நின்று என்னை பார்த்து கொண்டிருந்தார். அவரின் முகத்திலேயே அதிர்ச்சி தென்பட்டது. உடனடியாக அவரிடம், "சாரி" என்று சொன்னேன். அதன்பின் ஐபிஎல் தொடர் நினைத்து சோகம் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் விராட் கோலிக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த போது விராட் கோலி என்னிடம் வந்து, ஹேய்.. மேக்ஸி.. ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டர் விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டி வில்லியர்ஸ் என்று கட்டமைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று கேட்டார். அவர் அந்த வார்த்தையை சொல்லி முடிக்கும் முன்பே, எனக்குள் ஆர்வம் அதிகமாகியது. ஏனென்றால் ரிக்கி பாண்டிங் மற்றும் சச்சின் இருவருடம் ஐபிஎல் தொடரை தொடங்கினேன். அதன்பின் விராட் கோலி, டி வில்லியர்ஸ் உடன் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
ஐபிஎல் ஏலத்தின் போது ஆர்சிபி அணி எனக்காக பேடிலை தூக்கியதை மறக்கவே முடியாது. அந்த தருணத்தில் உலகிலேயே மகிழ்ச்சியான கிரிக்கெட்டர் நான் தான். பெங்களூர் அணிக்காக எனது 2வது இன்னிங்ஸை ஆடினேன். அந்த நேரத்தில் எனது வாழ்க்கையின் மிகமுக்கியமான கிரிக்கெட்டை விளையாடினேன் என்று தெரிவித்துள்ளார். மேக்ஸ்வெல்லின் வார்த்தைகள் இந்திய ரசிகர்களிடையே புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.