பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியின் போது, அரசு உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான செய்திகள் தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. மேலும், இது குறித்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
கடந்த சனிக்கிழமை அன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பரம எதிரி அணிகளாகக் கருதப்படுவதால், இரு தரப்பு அணி ரசிகர்களும் இந்தப் போட்டியை நேரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தனர்.

இந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் 'டைமண்ட் பாக்ஸ்' எனப்படும் ஒரு சிறப்பு பார்வையாளர் இடம் உள்ளது. அங்கு அரசு அதிகாரிகள் போட்டியைக் பார்ப்பதற்குச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் மகனும், மகளும் போட்டியைக் காண வந்திருந்தனர்.
போட்டியின் இடையே அந்த அதிகாரியின் மகள் கழிவறைக்கு சென்று இருக்கிறார். தான் மீண்டும் அமர வருவதைச் சுட்டிக்காட்டும் விதமாக தனது பர்ஸை அந்த இருக்கையின் மீது வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மேலும், அவரது சகோதரர் அந்த இடத்தை யாரும் அமராமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்திருக்கிறார். அவர் அந்த இருக்கையில் அமர முயற்சித்துள்ளார். அப்போது, அந்த ஐபிஎஸ் அதிகாரியின் மகன் தனது சகோதரி இங்கு வந்து அமர உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அதை காதில் வாங்காமல் அந்த வருமான வரித்துறை அதிகாரி அந்த இடத்தில் அமர்ந்துவிட்டார். அதனால் அங்கு வாக்குவாதம் எழுந்தது.
ஐபிஎஸ் அதிகாரியின் மகள் வந்த பிறகு இந்த வாக்குவாதம் மேலும் முற்றியது. ஒரு கட்டத்தில் அந்த வருமான வரித்துறை அதிகாரி அந்தப் பெண்ணின் முகத்துக்கு நேராக நின்று சத்தமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னர், தங்கள் தந்தைக்கு ஃபோன் செய்து வருமான வரித்துறை அதிகாரி தங்களை அச்சுறுத்திப் பேசியதாகவும், உடனடியாக நேரில் வருமாறும் அவர்கள் அழைத்தனர்.
அந்த நேரத்தில் ஐபிஎஸ் அதிகாரி மைதானத்திற்கு விரைந்தார். ஆனால், தான் செல்வதற்கு சற்று நேரம் ஆகும் என்பதால் அவர் தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, தனது மகன் மற்றும் மகளுக்கு உதவுமாறு கோரினார். ஆனால், எந்த உயர் அதிகாரியும் அவருக்கு உதவ முன்வரவில்லை. மேலும், அந்த 'டைமண்ட் பாக்ஸ்' பகுதியில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் இந்தச் சம்பவம் நடந்தபோது போட்டியைக் காண அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரும் இதைத் தடுத்து நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
யாரும் உதவ முன்வராததை அடுத்து, அந்த ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி மைதானத்திற்கு செல்லாமல் கப்பன்பார்க் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மகளை அச்சுறுத்தியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்து இருக்கிறார். பின்னர் இது தொடர்பான வீடியோவை அவரது மகன் தனது மொபைலில் பதிவு செய்திருந்ததால், அதையும் அவர்கள் ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளனர். தனது மகளை உடல் ரீதியாகத் தாக்க முயற்சித்ததாகவும், அவரது தனிப்பட்ட உரிமையைக் காயப்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.