அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பேட்ஸ்மேன்கள் அதிக அளவு ரன்களை குவித்து வருகிறார்கள். இந்த சூழலில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பி பரிசாக வழங்கப்படும். இந்த ஆரஞ்சு தொப்பியை யார் வாங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
இந்த நிலையில் நடப்பு சீசனில் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன், வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் இருக்கிறார்கள். இருவரும் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வருவதால் இருவருமே ஒருவருக்கொருவர் ஆரஞ்சு தொப்பியை மாற்றி மாற்றி கைப்பற்றுகிறார்கள்.

கடந்த வாரம் குஜராத் அணியும் லக்னோ அணியும் மோதியபோது முதலில் பேட்டிங் செய்த சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய நிலையில் மீண்டும் அதே போட்டியில் நிக்கோலஸ் பூரான், சாய் சுதர்சனிடமிருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இந்த நிலையில் இன்றும் அது போல் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
முதலில் குஜராத் அணியும் டெல்லி அணியும் மோதியது. இதில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன் 21 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 365 ரன்கள் சேர்த்து சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இதனை அடுத்து இரவு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் லக்னோ அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் நிக்கோலஸ் பூரான் 8 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் 368 ரன்கள் பெற்று பத்து நிமிடத்தில் சாய் சுதர்சனிடம் இருந்த ஆரஞ்சு தொப்பியை அவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது இருவருக்கும் இடையே வெறும் மூன்று ரன்கள் தான் வித்தியாசம் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கிறது. இந்த நிலையில் சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை வாங்கிய போது அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் ரன்கள் சேர்த்தோம். அதுவும் முதல் ஆறு ஓவர்களில் மிகவும் ஈசியாக இருந்தது. பந்து பேட்டிற்கு வந்த விதமும் வேகமாக இருந்தது. இதனால் நாங்கள் நல்ல முறையில் ரன்களை சேர்த்தோம். இதுபோல நல்ல சூழ்நிலையில் பந்தை சரியான டைமிங்கில் அடிக்க வேண்டும்.
இதற்காக நான் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகின்றேன். நான் எந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்று எல்லாம் யோசிக்க மாட்டேன். சூழலுக்கு தகுந்தார் போல் விளையாடுவேன். குறிப்பாக எந்த இடத்தில் அடித்தால் ரன்கள் கிடைக்கும் என்று தான் நான் பார்ப்பேன். பட்லருடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.