சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. இதன் மூலம் மும்பை அணி குவாலிஃபையர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த தோல்வி குறித்து பேசிய சுப்மன் கில், "கடைசி மூன்று அல்லது நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனால் இன்னும் இது ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டம். மூன்று எளிய கேட்சுகளை, குறிப்பாக பவர்பிளேயில் தவறவிட்டபோது எளிதாக இல்லை."

"பந்துவீச்சாளர்களுக்கு கட்டுப்படுத்துவது எளிதல்ல. நான் சொன்னது ஒன்றே ஒன்று தான். நீங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தை விளையாடுங்கள். இருவருக்கும் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் ஒரே இலக்குதான்... எங்களுக்கு நிறைய நேர்மறையானவை உள்ளன. கடைசி இரண்டு அல்லது மூன்று ஆட்டங்கள் எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் அமையவில்லை."
"ஆனால் அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக சாய்க்கு பாராட்டுகள் - அவர் அற்புதமாக இருந்தார். இந்த பிட்சில் 210 ஒரு சமமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் ஒரு, இரு சிக்சர்களை அதிகமாக அடிக்க விட்டோம் என்று நினைக்கிறேன். ஆடுகளம் நாங்கள் பேட்டிங் செய்யும் போதும் சுலபமாக தான் இருந்தது. மொத்தத்தில் இந்தப் போட்டி அபாரமாக இருந்தது."
"இந்த சீசனில் பல நல்ல விசயங்கள் நடந்து இருக்கிறது. பல வீரர்கள் சிறப்பாக பங்காற்றினார்கள். எனினும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை"என்று கில் கூறினார். தற்போது குஜராத் அணி வெளியேறிவிட்டதால், கில் மற்றும் சாய் சுதர்சன் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளனர். இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிக்கு இடையிலான 2வது 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் வெரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்த இரு வீரர்களும் 3ஆம் தேதி இங்கிலாந்துக்கு செல்ல இருக்கிறார்கள். இதனால் கெட்டதில் ஒரு நல்லது என்பது என்று சொல்வது போல் குஜராத் அணி முன்பே வெளியேறி விட்டதால், சாய் சுதர்சன், கில், முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு ஒரு ஓய்வும், நல்ல பயிற்சியும் இங்கிலாந்தில் கிடைக்கும்.