அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் அகமதாபாத்தில் நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், குஜராத் அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்ம் இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரரான பிராப்சிம்ரன் சிங் ஐந்து ரன்களிலும் அஸ்மதுல்லா உமர் சாய் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக விளையாடிய பிராயான்ஸ் ஆர்யா 23 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் கோல்டன் டக் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 15 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.

எனினும் மூன்றாவது வீரராக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அபாரமான ஆட்டத்தை ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் பவுண்டரி சிக்சர் என விளாசிய அவர் ராக்கெட் வேகத்தில் ரன்களை குவித்தார். 27 பந்துகளில் அரை சதம் கடந்த ஸ்ரேயாஸ், தொடர்ந்து அதிரடி காட்டினார்.
அணியின் ஸ்கோருக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் கொஞ்சம் கூட சுயநலம் இன்றி பவுண்டரிகளை விரட்டினார். ஒரு கட்டத்தில் 19வது ஒவர் முடிவில் ஸ்ரேயாஸ் 42 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் ஷாசாங் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஸ்ரேயாஸ் தமக்கு சிங்கிள்ஸ் வழங்க வேண்டாம் என்றும் அணியின் ஸ்கோருக்காக ரன் குவியுங்கள் என்றும் கூறியிருந்தார்.
இதனால் முஹமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் ஷாசாங் அபாரமாக விளையாடி மொத்தம் 22 ரன்களை குவித்தார். ஒரு பந்து சிங்கிள்ஸ் எடுக்க வாய்ப்பு கிடைத்தும், ஸ்ரேயாஸ் டபுள்ஸ் ஓடினார்.
இதனால் ஸ்ரேயாஸ்க்கு மீண்டும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இறுதியில் சஷாங் 16 பந்துகளில் 44 ரன்கள் விளாச பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மூன்று ரன்களில் சதத்தை அணிக்காக தியாகம் செய்திருக்கிறார். குஜராத் பந்துவீச்சு தரப்பில் தமிழக வீரர் சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.