ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்ததும், அனைவரும் எங்கு திரும்பினாலும், எங்கு பார்த்தாலும் கேள்விப்படுவதும் பார்ப்பதும் ஒரே பெயர்தான். அது 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி. ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அதிசயத்தை சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக், இன்று மிகவும் பிரமாதமான ஆட்டமாக இருந்தது. நாங்கள் இரண்டு மாதம் வைபவுடன் தான் நேரத்தை செலவழித்தோம்.

அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்து விட்டோம். அதுவும் குஜராத் அணி போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் எதிரே அவர் இந்த சாதனையை செய்திருக்கிறார். இதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளை செய்தோம்.
அதிலிருந்து பாடம் கற்று போட்டியை எவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது குறித்து யோசித்தோம். அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு வீரர்களும் இருந்தோம். நாங்கள் பயிற்சியில் செய்ததை என்று களத்தில் செய்து காட்டி இருக்கின்றோம்.
நல்லபடியாக அது கை கொடுத்திருக்கிறது. ஐபிஎல் தொடர் மூலம் நாம் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளலாம். ஆர்சிபி அணி எவ்வாறு விளையாடுகிறது சூர்யகுமார் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம். நாங்கள் வெற்றிக்காக போராடுகிறோம்.
ஆனால் இன்று போட்டி ஒரு தலைப்பட்சமாக முடிந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது நாங்கள் அடுத்த போட்டி குறித்து கவனம் செலுத்துகிறோம் என்று ரியான் பராக் கூறினார். இதை தொடர்ந்து பேசிய சுப்மன் கில், ராஜஸ்தான் அணி பவர் பிளேவில் இருந்தே போட்டியை எங்களிடம் கவர்ந்து சென்று விட்டது.
இரண்டு வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். நாங்கள் இரண்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன். இன்னும் சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். நான் பார்த்ததிலே மிகச் சிறந்த இன்னிங்ஸ் இன்று வைபவ் உடையது. இந்த நாள் வைபவ்க்கானது. அவர் அதிரடியாக ஷாட்டுகளை ஆடுகிறார். தன்னுடைய திறமையை முழுமையாக அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று கில் பாராட்டினார்.