மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடைகான போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இது குறித்து பேசிய அவர், ஆடுகள சூழலைப் பார்த்து முதலில் பந்து வீச முடிவு எடுத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் பனிப்பொழிவும் இங்கு அதிகமாக இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்வது சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியம் என்பதால் வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், நாங்களும் முதலில் பந்து வீச தான் முடிவெடுத்திருந்தோம். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது பனிப்பொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டி என்று தான் மனதில் வைத்து விளையாடுகின்றோம். பேட்டிங் டாப் வரிசையில் முதல் மூன்று அல்லது நான்கு வீரர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தாலே அது எனக்கு போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் குஜராத் அணி கடைசியாக சன்ரைசர்ஸ் உடன் விளையாடியது. அப்போது பேட்டிங்கில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரில் 2 சிக்சர் அடங்கும்.
வாஷிங்டன் சுந்தரின் ஸ்ட்ரைக் ரேட் 168 என்ற அளவில் இருக்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் முதல் முறையாக களமிறங்கியதும் அந்தப் போட்டியில் தான். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த ஒரு வீரரை ஏன் கில் நீக்கினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் வாசிங்டன் சுந்தர் நல்ல பவுலர் என்பதால் அவரை பந்துவீச்சிலும் ஏன் பயன்படுத்தவில்லை என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இம்பேக்ட் வீரர் விதி காரணமாக வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தற்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.